அரியலூர் மாவட்டத்தில் பௌத்தம்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் பௌத்த சமயச் சான்றுகள் காணப்படுகின்றன. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், கீழக்கொளத்தூர், குழுமூர், சுத்தமல்லி, பிள்ளைபாளையம், பெரிய திருக்கோணம், முத்துசேர்வைமடம், ராயம்புரம், விக்ரமங்கலம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் புத்தர் சிலைகள் உள்ளன. இவற்றில் சில சிலைகள் அருங்காட்சியகங்களில் உள்ளன. கங்கைகொண்ட சோழபுரம், இராசேந்திரசோழன் அகழ்வைப்பகத்தில் அரியலூரையும், கீழக்கொளத்தூரையும் சேர்ந்த புத்தர் சிலைகள் உள்ளன. அரியலூர் புத்தர் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், நேர்த்தியான வரிசையில் அமைந்த சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. இடது தோளிலிருந்து காணப்படுகின்ற மேலாடையானது உடலை அணைத்தவாறு கால் வரை உள்ளது. பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்க உருவங்கள் காணப்படுகின்றன. சிலையின் பின்புறத்தில் இரு பக்கத் தூண்க...