ஆனைமங்கலச்செப்பேடுகள் சொல்வது என்ன?: வி.என்.ராகவன்/தினமணி
சோழர் காலத்தைச் சேர்ந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் 1700-களில் டச்சு ஆளுமையின்போது நாகப்பட்டினத்துக்கு கிறிஸ்தவ மதப்பணிக்காக வந்த ஃபுளோரன்டியஸ் கேம்பர் என்பவரால் நெதர்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன. தமிழ், சம்ஸ்கிருத மொழிகளைக் கொண்ட 21 செப்பேடுகளும் சுமார் 31 கிலோ எடையுடையவை. இதில் பிணைக்கப்பட்டுள்ள செப்பு வளையத்தில் மாமன்னர் ராஜேந்திரசோழனின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இந்தச் செப்பேடுகளில் பௌத்த விகாரைக்கு ராஜராஜசோழன் வழங்கிய அறக்கொடைகள் வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நெதர்லாந்தில் லைடென் பல்கலைக்கழத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தச் செப்பேடுகளை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது, நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த சோழர் கால ஆனைமங்கலச் செப்பேடுகள் தி ஹேக் நகரில் மே 16இல் நடைபெற்ற விழாவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழர்களின் மிகச் சிறந்த பொக்கிஷமாகப் போற்றப்படும் இந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் குறித்து தஞ்சாவூரைச் ச...