சமண சுவட்டைத் தேடி

மன்னார்குடி, மல்லிநாதஸ்வாமி ஜினாலயத்தின் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று (9 மே 2025) சமண சுவட்டைத் தேடி என்னும் தலைப்பில் உரையாற்றினேன். வாய்ப்பு தந்த திரு பத்மராஜ் ராமசாமி உள்ளிட்ட விழாக்குழுவினருக்கும், உடன் வந்த திரு ராமகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றி. உரையின் சுருக்கத்தைக் காண்பதற்கு முன்பாகக் கோயிலைச் சற்றே சுற்றி வருவோம். தொடர்ந்து உரையைக் காண்போம்.















உரையின் சுருக்கம்

மன்னார்குடி மல்லிநாதஸ்வாமி ஜீனாலய பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதை எனக்குக் கிடைத்த ஒரு பெரும்பேறாகக் கருதுகிறேன்.

ஒரு பத்தியாக என்னுடைய முனைவர்ப்பட்ட ஆய்வேட்டில் இடம்பெற்ற குறிப்பானது சற்றே என்னை சமணத்தை நோக்கி இழுத்துச்சென்றது. முனைவர்ப் பட்ட ஆய்விற்காக (சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) பௌத்த சமயம் தொடர்பான சான்றுகளைத் தேடிச் சென்றபோது சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறான சிலைகளை தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் செண்பகரன்யேஸ்வரர் கோயில்திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி அருகில்  தப்ளாம்புலியூர்,  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்,  திருவாரூர் மாவட்டம் செங்கங்காடு,  பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப்பட்டிதஞ்சாவூர் மூலை அனுமார் கோயில் ஆகிய இடங்களில் காணமுடிந்தது. இவற்றில் சில சிலைகளை ஆய்வேட்டினை அளிக்கும் முன்பும், சிலவற்றை ஆய்வேட்டினை அளித்தபின்னரும் கண்டேன். வரலாற்றில் ஒரு சிறிய பதிவும் பெரிய சான்றாக அமைவதை என்னுடைய அனுபவத்தில் காணமுடிந்தது. இவற்றில் திருநாகேஸ்வரத்திலுள்ள சிலைகளை ஆரம்பத்தில் நானும் புத்தர் என்றே கூறிவந்தேன். அவை புத்தர் அல்ல என்று அறிவதற்குப் பல வருடங்கள் ஆயின.

செங்கங்காட்டிலும், பெருமத்தூரிலும் புத்தர் என்றும், ஆலங்குடிப்பட்டியில் சிவநாதர் என்றும் கூறிவருகின்றனர். மயிலை சீனி வேங்கடசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில்  புத்தர் சிலைகள் ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி, வெள்ளனூர் ஆகிய இடங்களில் உள்ளதாகக் கூறியிருந்தார். அதனைத் தெளிவுபடுத்த மேற்கொண்ட பயணமானது அது சமணர் என்பதை உணர்த்தியது. ஜெயங்கொண்டத்தில் நான் பார்த்த, கேமரா இல்லாத நிலையில் படமெடுக்க விடுபட்ட, சமணர் சிலையானது சில நாள்களில் காணாமல் போனதாகக் கூறினர். அது பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்கப்பட்டதை கண்டுபிடிக்கப்பட்டதை நாளிதழ் செய்தி (23 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்ட இந்தியதொல்லியல் துறையினர், தினமணி, 15 மார்ச் 2022) மூலமாக அறிந்தேன்.

ஆய்வேட்டினை அளித்தபின் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்காகச் சென்றபோது அங்கு வந்திருந்த சென்னை, அரசு அருங்காட்சியகத்தார் தமிழ்நாட்டில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிலைகள் தொடர்பாக ஒளிப்படங்களை அனுப்பக் கேட்டனர். அதனை அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். நான் அனுப்பிய ஒளிப்படங்களும் செய்தியும் அருங்காட்சியத்தார் வெளியிட்ட நூலில் (Dr K.Kannan & Thiru K.Lakshminarayanan, Iconography of the Jain images in the districts of Tamil Nadu, 2002) இடம்பெற்றது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. தொடர்ந்து சமணர் சிலைகளையும் பார்க்க ஆரம்பித்தேன்.

ஏப்ரல் 2003இல் தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர்ப் பட்ட ஆய்வாளர் திரு வீரமணி  தஞ்சாவூர் மாவட்டம்  பூதலூர் அருகே அடஞ்சூர் என்னுமிடத்திலுள்ள நல்லகூத்த அய்யனார் கோயிலில்  புத்தர் சிலை இருப்பதாகக் கூறி அழைத்துச்சென்றார். ஆனால் அது சமணர் சிலையாக இருந்தது. அதனைப் பற்றி தமிழ்ப் பல்கலைக்கழகச் செய்தி மலரில் எழுதினேன். பல ஆண்டுகளுக்குப் பின் அங்குச் சென்றபோது அச்சிலையைக் காணவில்லை. செய்தி மலர் ஒன்றே அதன் சான்றாக அமைந்தது.

இதற்கிடையில் பள்ளித்தலைமையாசிரியரும் என் நண்பரும் ஆய்வாளருமான திரு கோ. தில்லை கோவிந்தராஜன் இப்பகுதியில் சில இடங்களில் சில சமணர் சிலைகள் இருப்பதாகக் கூறினார். அவற்றைப் பற்றி ஒரு ஆய்வுத்திட்டம் மேற்கொள்ளலாம் என்று நான் கூறியபோது அவரும் இசைந்தார். அத்திட்டத்திற்கு நான் நெறியாளராக இருந்தேன். அதனை மேற்கொள்ளும் காலகட்டத்தில் புதிதாக சிலைகளைக் காணவேண்டும் என்றும், அவற்றைத் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்றும் முடிவெடுத்தோம். நானும், அவரும்  ஜூன் 2009இல் தஞ்சாவூர் மாவட்டம் செருமாக்கநல்லூரிலும்,  பிப்ரவரி 2010இல் தஞ்சாவூர் மாவட்டம் சுரைக்குடிப்பட்டியிலும் சமணர் சிலைகளைக் கண்டோம். நவம்பர் 2011இல் திருவாரூர் மாவட்டம் தோலியிலும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டோம். இவற்றில் சில சிலைகளைப் பற்றிய பதிவுகள் ஆய்வுத்திட்டத்தில் இடம்பெற்றன. G.Thillai Govindarajan, Jainism in Thanjavur district, Project Report, Nehru Trust for the Indian Collections at the Victoria Albert Museum, New Delhi, May 2010). 
  
சற்றொப்ப இதே காலகட்டத்தில் ஆகஸ்டு 2010 வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் முள்ளியாற்றுக்குள் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட வந்த ஒரு கல்லானது சமண தீர்த்தங்கரர் சிலை (பழங்காலச் சிலை குறித்து ஆய்வு, தினமணி, 21 ஆகஸ்டு 2010) என்பதை அறிந்தோம். இதனைப் பற்றி  செய்தி தந்த நிருபர் திரு அம்பிகாபதி, களப்பணியின்போது உடன்வந்திருந்தார்.

என்னுடைய முனைவர்ப்பட்ட ஆய்வு நிறைவுற்ற நிலையிலும் புத்தரைத் தேடுவதை நான் தொடர்ந்தேன். நவம்பர் 2011இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் திட்டத்திற்காக முனைவர் நா.முருகேசன் குழுவினருடன் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் களப்பணி மேற்கொண்டு ஜாம்பவானோடை, நாகப்பட்டினம், சிராங்குடி புலியூர், பள்ளியன்தோப்பு, வைப்பூர் ஆகிய இடங்களுக்கும், முனைவர் த.இலட்சுமணமூர்த்தி. திரு பி.கருணாநிதியுடன் பூதலூர், திருவையாறு வட்டங்களில் உள்ள சித்திரக்குடி, திருக்காட்டுப்பள்ளி, சங்கராம்பாடி. செம்பியன்களரி, ஒரத்தூர், பழமார்நேரி உள்ளிட்ட பல இடங்களுக்கும் நானும் தில்லை.கோவிந்தராஜனும் சென்றோம். 

அக்டோபர் 2013இல் நாளிதழ் செய்தியில் புதுக்கோட்டையிலுள்ள கவிநாடு கண்மாயில் ஒரு புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக கல்லூரிப் பேராசிரியரும் நண்பருமான முனைவர் சந்திரபோஸை மேற்கோள் காட்டி செய்தி வெளியானதைக் கண்டேன். ஒளிப்பட்த்தைப் பார்த்தபோது அது சமணர் சிலையைகத் தோன்றவே அவரைத் தொடர்புகொண்டேன். ஒரு வாரத்திற்குள் அங்கு சென்று அவருடன் சிலை இருக்கும் இடத்தை அடைந்தேன். அது சமணர் சிலை என்பதை அறிந்தோம்

பிப்ரவரி 2015இல் ஏடகம் நிறுவனரும் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதரும் என் நண்பருமான மணி.மாறனுடன் மேற்கொண்ட களப்பணியின்போது  தஞ்சாவூர் மாவட்டம், மணலூரில் ஒரு புத்தர்  சிலையைக் கண்டோம். அச்செய்தியைக் கண்ட அவருடை நண்பர் விஜயகுமார்  ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறியதன் அடிப்படையில் அங்குச் சென்றோம். அது சமணர் சிலை என்பதை அறிந்தோம். 

களப்பணியின்போது பல இடங்களில் புத்தரைச் சமணர் என்றும், சமணரைப் புத்தர் என்றும் கூறிவந்ததை நான் பார்த்துள்ளேன். தொடர் பயணங்களே வேறுபாட்டை உணர்த்துவதை அறிந்தேன். இவ்வாறாகச் சமணத் தடயங்களைப் பணி தொடர்ந்தது. 
 
நவம்பர் 2017இல் தஞ்சாவூர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை நடை 47இன்போது தஞ்சாவூர் சமணக்கோயில் அறங்காவலர் திரு அப்பாண்டைராஜ் தலைமையிலான குழுவினருடன் சுரைக்குடிப்பட்டி, நாட்டாணி, ஒரத்தூர் ஆகிய இடங்களுக்குச் சென்றோம்.  முந்தைய களப்பணியின்போது பார்த்த சிலைகளைக் கண்டோம்.   அவற்றில் சில இடம் மாறியிருந்தன.

பிப்ரவரி 2018இல், பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட, தமிழ்நாட்டு சமணத் தளங்கள் (Jain sites of Tamil Nadu) என்ற குறுந்தகட்டில் தமிழ்நாட்டில் உள்ள 82 சமணர் துணைத் தளங்கள் உள்பட 464 சமணர் தளங்களின் ஒளிப்படங்களும், கோயில்கள், குகைக்கோயில்கள், பாழடைந்த கோயில்களின் 7,873 ஒளிப்படங்களும் உள்ளன. இதில் களப்பணியின்போது நாங்கள் கண்ட 10க்கும் மேற்பட்ட சமண தீர்த்தங்கரர் சிலைகளின் ஒளிப்படங்கள் ஒப்புகையோடு இடம் பெற்றுள்ளன. முதன்முதலாக புத்தர் சிலைகளைப் பற்றித் தேடி நான் சென்ற அந்நிறுவனம் வெளியிட்ட குறுந்தகட்டில் எங்களது கண்டுபிடிப்புகள் இடம்பெற்றது ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக அமைந்தது.

இவ்வாறான தொடர் ஆய்வினைக் கண்ட திரு அப்பாண்டைராஜ் எங்களிடம் தஞ்சையில் சமணம் தொடர்பாக ஒரு நூலை எழுதலாம் என்ற ஒரு கருத்தை முன்வைக்க நாங்கள் அப்பணியில் ஈடுபட்டோம். அவருடைய பெருமுயற்சியாலும், நண்பர்களின் உதவியோடும் நூல் (முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ.தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன், தஞ்சையில் சமணம், ஏடகம், 2018) சமணம் தொடர்பான ஒரு முக்கியமான ஆவணமாக இந்நூல் அமைந்தது.   

பௌத்த சுவட்டைத் தேடும் பணியோடு சமண சுவட்டைத் தேடும் என் பணியானது நண்பர்கள், சக ஆய்வாளர்களின் ஒத்துழைப்போடு இப்பணி தொடரும். துணை நிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

தொடர்புடைய காணொளி : 

Comments