தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்
சோழ நாட்டில் கல்வெட்டு, புத்தர் சிலைகள், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி, புத்தர் சிற்பங்கள் ஆகிய சான்றுகளைக் கொண்ட பெருமை உடையது தஞ்சாவூர் மாவட்டமாகும்.
கும்பகோணம், கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள செவ்வப்ப நாயக்கர் காலக் கல்வெட்டின் மூலமாக திருவிளந்துறையில் ஒரு புத்தர் கோயில் இருந்ததை அறியமுடிகிறது. செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியின்போது விக்கிரம ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்ட இக்கல்வெட்டு குறிக்கும் நாள் கி.பி.1580ஆம் ஆண்டு ஜூலைத்திங்கள் ஆகும். தற்போது எலந்துறை என்றழைக்கப்படும் அவ்வூரில் புத்தர் கோயில் இருந்ததற்கான எச்சங்கள் காணப்பெறவில்லை. கும்பகோணத்தில் பௌத்தக் கோயில் இருந்ததை உணர்த்துகின்ற அண்மைக்காலச் சான்று இதுவேயாகும்.
இப்பகுதியில் அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, தஞ்சாவூர், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பழையாறை, பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. பெரும்பாலான புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் உள்ளன. இச்சிலைகள் சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாக அழகிய சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், தலைக்குப் பின் பிரபை, கழுத்தில் திரிவாலி எனப்படுகின்ற மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடனோ, இவற்றில் பெரும்பான்மையான கூறுகளுடனோ உள்ளன. இதன் சில கூறுகள் நின்ற நிலையிலுள்ள புத்தர் சிலைகளில் காணப்படுகின்றன.
அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள புத்தர் சிலைகள் பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயிலிலும், திருவிடைமருதூர் வட்டம் மானம்பாடி வடபத்ர காளியம்மன் கோயிலிலும், பட்டுக்கோட்டை அருகில் விக்ரமத்தில் புத்தடிக்கொல்லையிலும் உள்ளன. விக்ரமத்தில் உள்ள சிலைக்கு வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களின்போது தேங்காய் உடைத்து, சாம்பிராணி தூபம் இடுகின்றனர். அவ்வப்போது நேர்த்திக்கடனாகத் தேங்காய் உடைக்கின்றனர். புதிய காரியம் தொடங்கும் முன் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர். மானம்பாடி புத்தர் சிலை வழிபாட்டில் உள்ளது.
தலையில்லாத புத்தர் சிலைகள் அருந்தவபுரம் அருகில் திருக்கோயில்பத்திலுள்ள வஜ்ரபுரீஸ்வரர் கோயிலிலும், பட்டீஸ்வரம்-திருவலஞ்சுழி சாலையில் கோபிநாதப்பெருமாள்கோயில் அருகில் ஒரு தென்னந்தோப்பிலும், பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மணலூரில் ஒரு தோப்பிலும் உள்ளன.
புத்தா் சிலையின் தலைப்பகுதி மட்டும் தஞ்சாவூர்-மன்னார்குடி சாலையில் பெரண்டாக்கோட்டையிலும், பட்டீஸ்வரம் அருகேயுள்ள முழையூர் பரசுநாதசுவாமி கோயிலிலும், பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டைக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள வையச்சேரியில் குளக்கரையிலும், பட்டீஸ்வரம் அருகே கீழப்பழையாறையில் ஒரு தோப்பிலும் இருந்தன. பெரண்டாக்கோட்டையில் உள்ள சிலை சாம்பான் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது.
அருங்காட்சியகங்கள் என்ற நிலையில் தஞ்சாவூரில் கலைக்கூடம், மராத்தியர் அரண்மனை அகழ்வைப்பகம், தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகம், தஞ்சாவூர் அருங்காட்சியகம் ஆகிய நான்கு அருங்காட்சியகங்களிலும், சென்னையில் அரசு அருங்காட்சியகத்திலும் புத்தர் சிலைகள் உள்ளன. கலைக்கூடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் பாபநாசம் வட்டம் மதகரம், பட்டீஸ்வரம் ஆகிய இடத்தைச் சேர்ந்த புத்தர் சிலைகள் உள்ளன. மராத்தியர் அரண்மனை அகழ்வைப்பகத்தில் சோழன்மாளிகையைச் சேர்ந்த, பொ.ஆ.11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அமர்ந்த நிலையிலுள்ள ஒரு புத்தர் சிலையும், நின்ற நிலையிலுள்ள ஒரு புத்தர் சிலையும் உள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் மாத்தூரைச் சேர்ந்த, பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள ஒரு புத்தர் சிலை உள்ளது. தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் கிடைத்த இடம் பற்றிய குறிப்பு ஏதுமின்றி, பொ.ஆ.10-11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள ஒரு புத்தர் சிலை உள்ளது. சென்னை, அரசு அருங்காட்சியகத்தில் திருவலஞ்சுழியைச் சேர்ந்த, நின்ற நிலையிலுள்ள, பொ.ஆ.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஒரு புத்தர் சிலை உள்ளது.
புத்தர் சிலைகளை அடுத்து நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளைக் காண்போம். சென்னை, அரசு அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூர், கலைக்கூடத்தில் பொ.ஆ.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, நின்ற நிலையிலுள்ள ஒரு நாகப்பட்டினப் புத்தர் செப்புத் திருமேனியும், அய்யம்பேட்டையில் முனீஸ்வரன் என்ற பெயரில் வழிபாட்டில் அமர்ந்த நிலையில் வலது கை தரையைத் தொட்டமர்ந்த கோலத்தில் ஒரு நாகப்பட்டினப் புத்தர் செப்புத்திருமேனியும் உள்ளன. தஞ்சாவூர், மருத்துவக்கல்லூரி அருகில் உள்ள ரெட்டிப்பாளையம் காமாட்சிபுரம் பரசுராமர் குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரு சிற்பங்களில் ஒன்று தாமரைப்பீடத்தில் நின்ற நிலையில் உள்ள புத்தர் சிற்பமாகும்.
நிறைவாக, தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் உள்ள புத்தர் சிற்பங்களைப் பற்றி விவாதிப்போம்.
பெருவுடையார் கோயிலின் விமானத் தென்புறப்படிக்கட்டின் பக்கவாட்டுப்பகுதியின் கீழ்ப்புறத்திலும், ராஜராஜன் திருவாயிலான இரண்டாம் கோபுரத்தின் உட்புற தாங்குதளத்திலும் திரிபுராந்தகர் வரலாற்றுச் சிற்பக்காட்சிகள் உள்ளன. இவ்விரு தொகுப்பிலும் திருமால் புத்தராக போதி மரத்தடியில் திரிபுர அசுரர்களுக்குப் போதனை செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. இக்கோயிலின் கருவறையைச்சுற்றி சாந்தாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள புத்தர் ஓவியம் காணப்படுகிறது. ஐராவதீஸ்வரர் கோயிலின் ராஜகம்பீரன் மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள குதிரைக்குக் கீழாக ஒரு கருவறை போன்ற அமைப்பின் உட்புறத்தில் இடக்கரத்தை பாதத்தில் வைத்தவாறு வலக்கையை மார்பளவு உயர்த்தி போதனை செய்யும் பாவனையில் போதிமரத்துடன் புத்தரின் உருவமும், அதன் வெளிப்புறத்தில் சங்கு சக்கரத்தை ஏந்தியவர்களாக, உள்ளே புத்தராகத் திகழ்பவர் திருமால்தான் என்று உணர்த்தும் வகையில் ஜெயன், விஜயன் உருவங்களும் உள்ளன. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலின் முதல் திருச்சுற்றில் அமைந்துள்ள வேம்படி முருகன் சன்னதியின் முகமண்டப உட்புறச் சுவரின் மேல் புறத்தில் தியானக்கோலத்தில் இரண்டு புத்தர் கற்சிற்பங்கள் உள்ளன. கோயில்களில் காணப்படுகின்ற புத்தர் சிற்பங்கள் சோழர் காலம் முதல் பௌத்தத்திற்கு மன்னர்கள் அளித்த ஆதரவினை வெளிப்படுத்துகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படுகின்ற இச்சான்றுகள் பௌத்தம் தழைத்திருந்த நிலையில் எடுத்துரைக்கின்றன. இம்மாவட்டத்தில் மட்டுமே நான்கு அருங்காட்சியகங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. இப்பகுதியில் காணப்பட்ட சில புத்தர் சிலைகள் சுவடின்றி மறைந்துவிட்டன. இங்கு பழையாறைப் பகுதியில் அதிகமான புத்தா் சிலைகள் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி பிறிதொரு பதிவில் காண்போம்.
துணை நின்றவை
- வேங்கடசாமி, மயிலை சீனி. (1940, மூன்றாம் பதிப்பு 1957). பௌத்தமும் தமிழும். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
- (1978). Buddha sculpture unearthed. The Mail. .
- (1998, ஆகஸ்டு 2). குடந்தை அருகே சோழர் கால சிலைகள் கண்டெடுப்பு, தினமலர்.
- (2015, பிப்ரவரி 1). பௌத்த சுவட்டைத்தேடி : மணலூர், சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2015/02/blog-post.html
- (2016, மார்ச் 1). பௌத்த சுவட்டைத்தேடி : மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம், சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2016/03/blog-post.html
- ஜம்புலிங்கம், பா. (2022). சோழ நாட்டில் பௌத்தம். புது எழுத்து, காவேரிப்பட்டிணம்.
- (2023, பிப்ரவரி 23). பௌத்த சுவட்டைத்தேடி : தஞ்சாவூர் அருங்காட்சியகம், சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2023/02/blog-post_23.html
- (2023, ஆகஸ்டு 1). பௌத்த சுவட்டைத்தேடி : பழையாறை, சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2023/08/blog-post.html
- Jambulingam, B. (2023). Buddhism in Chola Nadu. Pudhu Ezuthu, Kaveripattinam.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: போதி முரசு, மே 2025
-------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment