பௌத்த சுவட்டைத் தேடி: ஆவுடையார்கோயில்

புதுக்கோட்டை, தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் திரு ஆ.மணிகண்டன், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் தான் கண்டுபிடித்த தலையில்லாத ஒரு புத்தர் சிலையைக் காண அழைக்கவே அவருடைய குழுவினருடன் 16 ஆகஸ்டு 2025இல் களப்பணி சென்றேன். அச்சிலையைப் பற்றியும்,  அது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளையும் காண்போம். 




ஆவுடையார்கோயில் பெரிய கண்மாய் பெருமடை வாய்க்கால் மேட்டில் உள்ள இச்சிலை இம்மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற இரண்டாவது புத்தர் சிலை ஆகும். இதனை உள்ளூரில் தலையில்லா சாமி என்றழைக்கின்றனர். இதற்குக் களிமண்ணால் தலை செய்து வைத்தால் மழை பெய்யும் என்று அவர்கள் நம்புகின்றனர்.  சோழ நாட்டில் இவ்வாறாகப் பல இடங்களில் புத்தரை மழையோடு தொடர்புபடுத்தி பல நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

இந்தச் சிலையைப் பார்த்தபோது கீழக்குறிச்சி புத்தர் நினைவிற்கு வந்தார். சிலையின் அமைப்பும், இருந்த இடமும் சற்றொப்ப கீழக்குறிச்சியைப் போலவே இருந்தது.  

48 செமீ உயரமுள்ள இச்சிலை பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இச்சிலை வலது மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை, கழுத்தில் திரிவாலி, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது கை ஆகியவற்றுடன் உள்ளது.  கழுத்தின் பின்புறத்தில் உடைந்த நிலையில் பிரபையின் பகுதி உள்ளது. வலது கையின் கீழ்ப்பகுதி சிதைந்துள்ளது. சிலையின் தலைப்பகுதி அருகில் இருக்கும் வாய்க்காலில் கிடந்ததாக உள்ளூரில் கூறினர். ஆனால், அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தேடி அலைந்தபோது வளையமாபுரத்தில் புத்தர் சிலையின் தலைப் பகுதியைத் தேடியது நினைவிற்கு வந்தது. அடுத்தடுத்த களப்பணியின்போது ஆவுடையார்கோயில் புத்தர் சிலையின் தலைப்பகுதியைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  

ஒருங்கிணைந்த திருச்சி, ஒருங்கிணைந்த தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் சோழ நாட்டில் பௌத்தம் (முனைவர் பா.ஜம்புலிங்கம், புது எழுத்து, 2022) என்ற நூலிலும், அதன் ஆங்கிலப் பதிப்பிலும் (Dr B.Jambulingam, Buddhism in Chola Nadu, Pudhu Ezhuthu, 2023) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அந்நூலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாற்றறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும் (1957) நூலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி, வெள்ளனூர் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவ்விடங்களில் புத்தர் சிலைகளைக் காணமுடியவில்லை.

இரு புத்தர் சிலைகள் இங்கு இருந்ததாக பதிவுகள் உள்ளன. சென்னை, அரசு அருங்காட்சியகத்தின் தொல்லியல் பிரிவின் முன்னாள் காப்பாட்சியரான பி.ஆர்.சீனிவாசன், “தென்னிந்தியாவில் புத்தர் சிலைகள்” (1960) என்ற கட்டுரையில் கரூரில் உள்ளதாகக் குறிப்பிடும் ஒரு புத்தர் சிலை, நிலவளமுடைய அய்யனார் கோயிலில் உள்ளது. புதுக்கோட்டை, அரசு அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியர் முனைவர் ஜெ.ராஜா முகமதுவால் வன்னிச்சிப்பட்டினத்தில் 2002இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை, 2008இல் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புத்தர் சிலை இம்மாவட்ட பௌத்த சமய வரலாற்றுக்கு முக்கியமான சான்றாக அமைந்துள்ளது. 

நாளிதழ், சமூக வலைதளங்களில் செய்திகள்





தினமலர், புதுக்கோட்டை, 27 ஆகஸ்டு 2025

தினமலர், சென்னைப் பதிப்பு, 27 ஆகஸ்டு 2025

Comments

  1. மணிகண்டன்.ஆ28 August, 2025

    தங்களின் வருகையால் நாங்கள் பெருமிதமடைகிறோம்

    ReplyDelete
  2. சிறப்பு.

    தங்கள் களப்பணி தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இராஜகுரு, இராமநாதபுரம்29 August, 2025

    சிறப்பான தகவல்கள் ஐயா. படங்களுடனும், பிற ஆய்வாளர்களின் ஆய்வுக் கருத்துகளுடனும் கட்டுரை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது ஐயா

    ReplyDelete
  4. தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் முனைவர் அவர்களே....

    ReplyDelete
  5. வாழ்த்துகள் ஐயா.
    தங்களின் தேடல் தொடரட்டும்

    ReplyDelete
  6. சிறப்பு...

    நற் தகவல் ...
    அடியேனும் அறிந்து கொண்டேன்.. தம்பியின் தேடல் தொடரட்டும்....

    ReplyDelete

Post a Comment