பௌத்தத் தமிழியல் பொதுவியல் (தொகுதி 1) : முனைவர் சு.மாதவன்

ஆய்வு வாழ்த்துரை முனைவர் சு.மாதவன் எழுதியுள்ள பௌத்தத் தமிழியல்-பொதுவியல் 1 என்ற இந்நூல் எட்டு கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஒரு பெரிய தேடலை இந்நூலின் மூலம் ஆரம்பிக்கின்ற நூலாசிரியர் பௌத்த மற்றும் சமணம் தொடர்பான மொழி, வரலாறு, மெய்யியல் உள்ளிட்ட பொருண்மைகளை தமிழ் இலக்கியத் தளத்திலும், பிற தளங்களிலும் அமைத்து அவற்றை நடைமுறை வாழ்வியலோடு ஒத்து நோக்குகின்றார். இக்கட்டுரைகளைப் பற்றிய ஒரு பறவைப்பார்வை மூலமாக ஆசிரியரின் நுண்மான் நுழைபுலத்தினை அறியமுடியும். “அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்” என்ற முதல் கட்டுரையில் அறம், தருமம், நீதி ஆகிய மூன்றும் இலக்கியத் தமிழ் மரபிலும் இந்தியத் தத்துவ மரபிலும் கொண்டுள்ள தனித்த சிறப்பியல்புகளும், பொதுவியல்புகளும், பயனுறும் இடம், சூழல், விளைவு ஆகியவற்றுக்கேற்ப பொருள் வேறுபாடுகளும் கொண்டுள்ளமை ஒப்புநோக்கீட்டு அளவில் ஆராயப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய மரபில் வைதீக மரபு, அவைதீக மரபு கலந்து வெளிப்படும் நிலையில் தருமம், நீதி என்பதோடு மட்டுமன்றி புண்ணியம் என்பதோடும் இணைத்து குறிப்பிடப்படும் அனைத்து நன்னெறிகளையும் சுட்டும் ஒரே சொல்லா...