இவர் புத்தர் இல்லை, பகவர்

இவர் புத்தர் இல்லை, பகவர். “கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் சிலை உள்ளது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டு நூல்கள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்” என்று மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார். [1] நாகேஸ்வரர் திருமஞ்சன வீதியிலுள்ள பகவத் (பகவ) விநாயகர் கோயிலின் கருவறையில் விநாயகர் சிலையும், முன் மண்டபத்தில் அவர் கூறிய சிலையும் உள்ளது. அவரது கருத்தை எனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் அப்படியே பதிவுசெய்தேன். [2] அக்கோயிலுக்கு அருகில் பகவத் படித்துறை உள்ளது. தஞ்சாவூர் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், முதலமைச்சரான கோவிந்த தீட்சிதர் மற்றும் மராட்டிய மன்னர்கள் காவிரி ஆற்றங்கரைகளை அழகுபடுத்த விரும்பிப் படித்துறைகளையும், கோயில்களையும், நீராழி மண்டபங்களையும் கட்டினர். காவிரியின் இரு...