பௌத்த சுவட்டைத் தேடி : அய்யம்பேட்டை

ஆய்வுக்காகப் பதிவு செய்தபின், பிற தேடல்களுடன், களப்பகுதியில் புதியதாக ஒரு நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டேன்.  ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் 1993 முதல் இல்  இறங்கியபோதும், அவ்வாறான ஒரு திருமேனியைக் காணும் வாய்ப்பு 1999இல் கிடைத்தது.   மீசை புத்தரை அடுத்து இது  கண்டுபிடிப்பு பற்றிய இரண்டாவது நாளிதழ் செய்தியாகும்

நாகப்பட்டினத்தில் கி.பி.1856இலிருந்து 350க்கும் மேற்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் கிடைத்துள்ளன. அவை உள்நாட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையில் ஒரு புதிய நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் கண்டோம். நாகப்பட்டினத்திலிருந்து குடிபெயர்ந்து அய்யம்பேட்டையில் வந்துள்ள ஒரு குடும்பத்தார் மூன்று தலைமுறையாக இத்திருமேனியை முனீஸ்வரர் என்று வழிபட்டுவருகின்றனர். இது 9 செ.மீ. உயரமுள்ளது.

அமர்ந்த நிலையில், வலது கை தரையைத் தொட்டமர்ந்த நிலையிலும், இடது கை தியான முத்திரையில் மடியில் வைக்கப்பட்ட நிலையிலும் உள்ளன. முகம், உடலமைப்பு, மேலாடை தெளிவாகக் காணப்பெறவில்லை. இதன் கலைப்பாணி கொல்கத்தா, இந்திய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாகப்பட்டினப் புத்தர் செப்புத்திருமேனிகளில் ஒன்றை ஒத்துள்ளது.

 



அவர் தந்த நாளிதழ் இதழ்களில் அத்திருமேனியைப் பற்றி  அவர் விவாதிக்கிறார். அவற்றில் இந்த புத்தரைப் பற்றி விவரமாகக் கூறியுள்ள அவர், "சோழ தேசத்தில் பௌத்தம் என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ள தத்துவத்துறை ஜம்புலிங்கம் தொகுத்துள்ள, நாகையில் இருந்து கிடைத்த புத்தரின் திருமேனி புகைப்படத் தொகுப்பு ஒப்பாய்வும் மேற்கூறிய தகவல்களை உறுதி செய்கிறது" என்று ஆய்வினை மேற்கோள் காட்டியுள்ளார்.  
சென்னை, அரசு அருங்காட்சியகத்தில் அதிக எண்ணிக்கையிலான நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான ஒரு திருமேனி தஞ்சாவூர், கலைக்கூடத்தில் உள்ளது. தற்போது இவ்வகை செப்புத்திருமேனி உள்ள இடம் என்ற பெருமையைத் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பெறுகிறது. இவ்வாறான செப்புத்திருமேனிகள் சோழ நாட்டில் அண்மைக்காலத்தில் பிற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இத்திருமேனியைப் பார்க்க அய்யம்பேட்டைக்குச் சென்றதும், அக்கண்டுபிடிப்பு தொடர்பாக நாளிதழ்களில் செய்தி வந்ததும் மறக்க முடியாத அனுபவமாகும். களப்பணியின்போது கண்ட ஒரே நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி இதுவேயாகும்.  
-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு அய்யம்பேட்டை செல்வராஜ், நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------------------
English version: In search of imprints of Buddhism : Ayyampet
-------------------------------------------------------------------------------------------
24.11.2025இல் மேம்படுத்தப்பட்டது. 

Comments

  1. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  2. நன்றி அய்யா தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா.....என்னிடம்கூட இந்த news paper clippings இலலை.ஐயா.... (வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ்முகநூல் மூலமாக : Selvaraj Nayakkavadiyar)

    ReplyDelete
  4. / புத்த செப்புத்திருமேனி ஒன்றையாவது கண்டுபிடிக்கவேண்டும் / ஆய்வின் போது தற்செயலாகக் கண்டு பிடிக்கப்படுவது அல்லவா சிலைகள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  6. ஒரு பேராசிரியர் செய்ய வேண்டியதைத் தாங்கள் செய்து வருகிறீர்கள். அதற்கு இந்தத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

    ReplyDelete
  7. வாழ்த்துகள்!! அய்யா..........

    ReplyDelete
  8. வாழ்த்துகள் அய்யா உங்களின் பணிகள் என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

    ReplyDelete

Post a Comment