சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள் : வழிபாடும் நம்பிக்கைகளும்


   சோழ நாட்டில் புத்தர் சிற்பங்களுக்கு வழிபாடு நடத்தப்படுவதைக் களப்பணியின்போது காணமுடிந்தது. அவ்வாறு வழிபாடு நடத்தப்படும் வழிபாடுகள் பற்றியும், புத்தர் தொடர்பாக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் பற்றியும் அறிந்துகொள்ள இம்மாதக் களப்பணியில் இணைந்துகொள்ள அழைக்கிறேன்.  அனைத்து இடங்களுக்கும் ஒரே முறை செல்வது சாத்தியமாகாது என்ற நிலையில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே உங்களைத் துணைக்கு அழைக்கிறேன், வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
   அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், உள்ளிக்கோட்டை, ஒகுளூர், கரூர், கிள்ளியூர், பட்டீஸ்வரம், பரவாய், புட்பவனம், புத்தமங்கலம், புதூர், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மன்னார்குடி, மானம்பாடி,  விக்கிரமங்கலம், விக்ரமம், வெள்ளனூர் உள்ளிட்ட பல இடங்களில் புத்தருக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அய்யம்பேட்டையில் முனீஸ்வரன் என்றும், பெரண்டாக்கோட்டையில் சாம்பான் என்றும், பெருஞ்சேரியில் ரிஷி என்றும் புத்தரை வழிபடுகின்றனர்.
ஒகுளூர்
   பெரம்பலூர் அருகே ஒகுளூர் என்னும் சிற்றூரில் அமர்ந்த நிலையில் தியானகோலத்தில் ஒரு புத்தர் சிற்பம் உள்ளது. இப்பகுதியைச் சார்ந்தோர் பெரும்பாலும் வியாபாரத்தின் பொருட்டு வெளிநாடு செல்கின்றார்கள். அவ்வாறு செல்லும்போது புத்தர் சிற்பத்திற்கு மாலை போட்டு, பூசை செய்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு செல்லும்போது தங்களின் பணி சிறப்பாக அமைவதாகக்கூறுகின்றனர்.
கரூர்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரூரில் உள்ள நிலவளமுடைய அய்யனார் கோயிலில் உள்ள புத்தருக்குத் தொடர்ந்து வழிபாடு நடைபெற்றுவருகிறது. இக்கோயிலில் உள்ள கருப்பசாமிக்குப் பலியிடுவது வழக்கமென்றும்,  பலியிடல் தெரியாமல் இருப்பதற்காக புத்தரைத் தனியாக வைக்கப்பட்டுள்ளதாகவும் களப்பணியின்போது கூறினர். 

கற்பகநாதர்குளம்
  திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள இச்சிற்றூரில் காடுவெட்டி என்னுமிடத்தில் ஒரு புத்தர் சிற்பம் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்தது. அதனை அமணர் என்றும், சமணர் என்றும் உள்ளூரில் அழைத்துவருவதைக் களப்பணியின்போது காணமுடிந்தது. வழிபாடு நடைபெறாவிட்டாலும் மதிக்கப்படவேண்டிய ஒரு சிற்பமாக அதனைக் கருதி வந்தனர். ஆனால் இச்சிற்பம் திருட்டுப் போய்விட்டதைப் பற்றி சில மாதங்களுக்கு முன் நாம் விவாதித்தோம்.
பட்டீஸ்வரம்
   பட்டீஸ்வரம் கோவிந்தக்குடி சாலையில் திரௌபதி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக முத்துமாரியம்மன் கோயிலில் வலப்புறம் பரிவார தெய்வங்களில் ஒன்றாக அமர்ந்த நிலையில் இருந்த புத்தர் சிற்பம் பாதுகாப்பு கருதி தற்போது கோயிலின் உள்ளே வைத்துள்ளனர். முத்துமாரியம்மனுக்கு சூடம் கொளுத்தி பூசை செய்யும்போது இந்த புத்தருக்கும் வழிபாடு செய்கின்றனர்.இவற்றைத் தவிர பட்டீஸ்வரம் பகுதியில் வழிபாட்டில் இல்லாத வேறு இரு புத்தர் சிற்பங்கள் இருந்தது பற்றியும் அவை காணாமல் போனது பற்றியும் முன்பொரு பயணத்தின்போது விவாதித்தோம்.
புட்பவனம்
   வேதாரண்யம் அருகே புட்பவனம் என்னுமிடத்தில் ஒரு தோப்பில் அமர்ந்த நிலையில் தியான கோலத்திலான புத்தர் சிற்பம் உள்ளது. தாம் நினைத்தது நிறைவேறியபின் முடியெடுத்து நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வைகாசிப் பூர்ணிமையின்போது  இச்சிற்பத்திற்கு சர்க்கரைப்பொங்கல் வைத்துப் படைக்கின்றனர்.
புத்தமங்கலம்
   புத்தமங்கலத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்திலான புத்தர் சிற்பம் உள்ளது. வைகாசிப் பூர்ணிமையின்போது  இப்புத்தருக்குச் சிறப்பு செய்கின்றனர். வழிபாடு நடத்துகின்றனர்.
 புதூர்
புதூரில் உள்ள புத்தர் சிற்பம்
திருவாரூர் வட்டத்தில் திருநெல்லிக்காவல் புகைவண்டி நிலையம் அருகே உள்ள புதூர் என்னும் சிற்றூரில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் ஒரு புத்தர் சிற்பம் களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. மார்பிலும் நெற்றியிலும் திருநீற்றுடன் இந்த புத்தர் சிற்பம் உள்ளது. திருமணமாகாத பெண்கள் இச்சிறப்த்தைச் சுற்றி வந்தால் திருமணம் நடைபெறும் என நம்புகிறார்கள். இச்சிற்பத்தின் நெற்றியிலும், மார்பிலும் திருநீறு பூசியுள்ளனர். 
பேட்டவாய்த்தலை
   திருச்சி கரூர் சாலையில் உள்ள பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் அருகே ஒரு புத்தர் சிற்பம் முன்பு இருந்தது. பேட்டவாய்த்தலையில் அச்சிற்பத்தினை  சமணர் சிற்பம் என்று கூறிவந்ததைக் களப்பணியின்போது காணமுடிந்தது. இப்பகுதியில் கடன் கொடுத்தவன், கடன் வாங்கியவன் என இரு சிற்பங்கள் இருந்ததாகவும் ஒன்று மண்ணில் புதையுண்டுவிட்டதாகவும், அச்சிற்பங்கள் இருந்த இடம் கடன்காரன் குழி என்றும் கூறிவந்தனர். அச்சிற்பம் தற்போது திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 
மங்கலம்
   முசிறி வட்டத்தில் உள்ள மங்கலம் என்னும் சிற்றூரில் அரவாண்டியம்மன் கோயில் உள்ளது. அங்கு ஒரு புத்தர் சிற்பம் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. அந்த புத்தரை செட்டியார் என்று கூறி வழிபடுகின்றனர். கிராம தேவதைக்கு அடிக்கடி பலி கொடுப்பது வழக்கமென்றும், பலி கொடுப்பதை புத்தர் விரும்பமாட்டாராகையால்  பலியிடல் தெரியாமலிருப்பதற்காக திரைச்சீலையைப் போட்டுவிடுவதாகவும் கூறினர். சூடம் கொளுத்துவது, அகல் விளக்கேற்றுவது, பூசை செய்தல் ஆகியவைதொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் மீசையுடன் உள்ள ஒரே புத்தர் சிற்பம் இதுவேயாகும்.
ராயம்புரம்
   புத்தர் சிற்பம் உள்ள ஊர் முழுமையான ஊராகும் என்றும், அவ்வகையில் தம் ஊர் முழுமையான ஊர் என்றும் ராயம்புரத்தில் களப்பணியின்போது கூறினர். 
விக்கிரமங்கலம்
  ஜெயங்கொண்டம் குறுக்குச்சாலை அருகே விக்கிரமங்கலம் என்னும் சிற்றூரில் அருகருகே இரு புத்தர் சிற்பங்கள் உள்ளன. பேட்டவாய்த்தலையில் கூறிவந்ததைப்போல் இச்சிற்பங்களை கொடுத்தவன், வாங்கியவன் என்று கூறுகின்றனர்.கடன் கொடுத்தவன் சிற்பம் அழுவதுபோல் இருப்பதாகவும், கடன் வாங்கியவன் சிற்பம் சிரிப்பதுபோல் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இச்சிற்பங்களுக்கு முன்பாக ஒரு வேல் வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இச்சிற்பங்களுக்குப் பூசை செய்வதில்லை, இருப்பினும் மழை வராத சமயங்களில் புத்தர் சிற்பங்களுக்கு முன் உள்ள வேலை எடுத்து அந்த இடத்திலேயே அருள் ஏற்றி மேளதாளத்தோடு ஊரைச் சுற்றி வந்து மறுடியும் கொண்டு வந்து வைத்தால் மழை வரும் என நம்புகின்றார்கள். 
விக்ரமம்
   மன்னார்குடி அருகே உள்ள மதுக்கூர் என்னும் சிற்றூருக்கு அருகே விக்ரமம் என்னுமிடத்தில் ஒரு புத்தர் சிற்பம் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் தேங்காய் உடைத்து, சாம்பிராணி போடுவதாகக் களப்பணியின்போது கூறினர். 
   இச்சிற்பங்களில் சில புத்தர் சிற்பங்கள் கோயில்களில் உள்ளன. சில பொது இடங்களில் உள்ளன. கோயில் போன்ற அமைப்பு என்ற நிலையில் புத்தமங்கலம், பெருஞ்சேரி, மங்கலம் ஆகிய இடங்களில் மட்டும் உள்ளது. பல இடங்களில் கோயில் போன்ற அமைப்பு இல்லாவிட்டாலும் புத்தரைத் தொடங்கி வணங்கிவருவதையும்,  சில இடங்களில் புத்தரைத் தொடர்புபடுத்தி சில நம்பிக்கைகளையும் மக்கள் கொண்டுள்ளதையும், களப்பணியின்போது காணமுடிந்தது.  

நன்றி
1993 முதல் 2012 வரை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கண்ட இடங்களுக்குச் சென்றபோது களப்பணியின்போது எண்ணற்றோர் தகவல்கள் தந்து உதவினர். அவர்களுக்கு நன்றி.

Buddha sculptures of Chola country : worship and faiths 
This article details the worship of Buddha in selected places in the Chola country which include Ayyampet, Ayiraveli Ayilur, Buddhamangalam, Karpaganatharkulam, Karur, Killiyur, Manambadi, Mangalam, Mannargudi, Ogulur, Paravai, Pattiswaram, Perandakottai, Perunjeri, Pettaivaithalai, Pushpavanam, Puthur, Rayampuram, Ullikkottai, Vellanur, Vikramam and Vikramangalam and the connected faiths and beliefs the people had on Buddha. 


Comments

  1. மார்பிலும் நெற்றியிலும் திருநீருடன் புத்தர் காட்சியளிப்பதும், மீசையுடன் புத்தர் சிலை இருப்பதும் வியப்பிற்குரிய செய்திகளாகும். பிற மதத்தினர் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற பலியிடுதல் என்னும் சடங்கினைச் செய்யும்போது, புத்தர் சிலையினைத் திரைச்சீலையிட்டு மறைக்கும் செயலானது,புத்தர் போதனைகள் மற்ற மதத்தினரிடையேயும் ஏற்படுத்தியுள்ளத் தாக்கத்தினையேக் காட்டுகின்றது. இது போன்ற செய்திகளை தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி.

    ReplyDelete
  2. The extensive data collected by Dr Jambulingam shows the spread and practice of Buddhism in those days. Actually the common men followed the religion which their ruler wanted them to follow; otherwise they would be taken to task as has been witnessed in the case of Saint Thirunavukkarasu. I am very much pleased by the keen interest shown by the researcher in vistiing different places and collecting data. It would be better if some link either from ancient literature or inscriptions could be established to those findings. Some attempt could be made to date the sculptures unearthed as is done by the the Archeology Department (July 5, 2012 report in the Hindu states that attempts are made to date the inscriptions of Chola period at Pudukkottai unearthed recently. Further, attempt could be made to check whether these is any remnant of Buddhism in Tamilnadu refected either in folklore or some such thing. C.Sivashanmugam

    ReplyDelete
  3. The article is very useful.P.Perumal

    ReplyDelete
  4. quite interesting blog on Buddha worship. some attempts should be made to date at least one of the sculpture, otherwise it is like a news report. I feel it is an important finding adn the Govt should help the researcher concerned. one can note in certain places in Thailand, we have vishnu scultpture along with Buddha adn the Thai people do not really distinguish one form the other.thks for this nice spot
    suryanarayanan, paris

    ReplyDelete

Post a Comment