சோழ நாட்டில் பௌத்தம் : அறிமுக விழா : தமிழ்ப் பல்கலைக்கழகம்

என் வாழ்வில் நினைவில் நிற்கும் நாளாக 21 பிப்ரவரி 2023 அமைந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக 16 ஆகஸ்டு 1982இல் சேர்ந்து, உதவிப்பதிவாளராக ஏப்ரல் 2017இல் பணி நிறைவுபெற்றேன்.

பணி நிறைவு பெற்ற நாளில்...நன்றியுரை




பணி நிறைவு பெற்ற நாளில்...விடை பெறல்

அதற்குப் பின் சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் அறிமுக விழாவிற்காக 21 பிப்ரவரி 2023இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். பணியாற்றிய நிறுவனத்தில் மேடையேறி அக்கால, இக்கால நிகழ்வுகளையும், நூலைப் பற்றிய அனுபவத்தையும் பகிர்ந்தபோது என் மனம் சற்றே நெகிழ்ச்சியடைந்ததை உணர்ந்தேன். என் நூலைப் பற்றிய முதல் விழா, அதுவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று, அதில் கலந்துகொண்டதை எனக்குக் கிடைத்தற்கரிய பெரும்பேறாகக் கருதுகிறேன்.



21 பிப்ரவரி 2023இல் நூல் அறிமுக விழாவிற்கு வரும் துணைவேந்தர், பதிவாளர் (பொ) உள்ளிட்டோர்

விழாவில் தலைமையுரையாற்றிய தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன், ஒரு நூலில் எந்த மாதிரியான செய்திகளைக் கூறலாம் என்பதற்கும் அவற்றைத் தொகுப்பாகவும், கோர்வையாகவும்,  சிறப்பாகவும் கூறலாம் என்பதற்கும் இந்நூல் எடுத்துக்காட்டாகும் என்றும் கூறியதோடு நூலாசிரியர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாளராகப் பணியாற்றினார் என்பது தமிழுக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை என்றும், இன்னும் பல நூல்களை  இவர்  வெளியிட வேண்டும், அவற்றை பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறினார். பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், கலைப்புல முதன்மையர் பெ.இளையாப்பிள்ளை வாழ்த்துரை வழங்கினர்.




தலைமையுரையாற்றிய மாண்பமை துணைவேந்தர் பேரா.வி.திருவள்ளுவன்
 (உடன்: இடமிருந்து இலக்கியத்துறைத்தலைவர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை,
சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் முனைவர் மணி.மாறன்,
பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், முனைவர் பா.ஜம்புலிங்கம்,
நாட்டுப்புறவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா,
மொழியியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மா.இரமேஷ்குமார்) 





நூலினை அறிமுகப்படுத்தி உரையாற்றிய சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன்,தன் உரையில் கூறியதாவது. "ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பௌத்த சமயச் சான்றுகளை நூலாசிரியர் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளார். 1940இல் வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும் என்ற நூலைத் தொடங்கி இத்துறையில் பிற அறிஞர்கள் எழுதியுள்ள நூல்களை ஆண்டுவாரியாகத் தந்துள்ளார்.  பௌத்தம் தொடர்பான இலக்கியம், கல்வெட்டு, வெளிநாட்டவர் குறிப்புகள், செப்பேடு உள்ளிட்ட பல சான்றாதாரங்களுடன் இப்பகுதியில் காணப்படுகின்ற  63 புத்தர் சிலைகளைப்  பற்றிய குறிப்புகளை அவற்றின் காலம், அமைப்பு,  சிறப்புக்கூறுகள் என்ற வகையில் தந்துள்ளார். தலையில்லாத புத்தர் சிலை, தலை மட்டுமே உள்ள சிலை, மீசையுள்ள புத்தர் சிலை என்ற வகையில் பலவாறான புத்தர் சிலைகளைப் பற்றியும் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலிலும் உள்ள புத்தர் சிற்பங்களைப் பற்றி விவாதித்துள்ளார். அடிக்குறிப்பு, துணைநூற்பட்டியல் போன்றவற்றை சிறப்பாக அமைத்துள்ளதோடு சிலைகளைக் குறித்து தகவல் தந்தவர்களையும் நினைவுகூர்ந்து நன்றி கூறியுள்ளார். இந்நூலின் சிறப்புக்கூறாக நூலாசிரியர் புதியதாகக் கண்டுபிடித்த 19 புத்தர் சிலைகளையும்,  புத்தரைத் தேடிச்சென்றபோது  கண்டுபிடித்த 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கூறலாம்.  நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்நூல் பௌத்த சமய வரலாற்றிற்குப் பெரும் பங்களிப்பாகும்" என்று கூறினார். 

என் ஏற்புரையில் 1993 முதல் இவ்வாய்விற்காக மேற்கொண்ட களப்பணியின்போது இரு வெவ்வேறு பாதைகளில் சென்று பார்த்த ஒரே சிலை, 1978இல் வெளியான நாளிதழ் செய்தியை வைத்துப் பார்த்த சிலை, வாய்க்காலைத் தாண்டியும், வயல்வெளிகளிலும், தோப்புகளிலும் சந்தடியற்ற இடங்களிலும் உள்ள சிலைகளைப் பார்த்தது உள்ளிட்ட அனுபவங்களைப் பகிர்ந்தேன். ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் கூறிய கருத்தினை ஓரிடத்தில் மாற்றி முனைவர் பட்ட ஆய்வேட்டில் பதிந்ததையும் தொடர்ந்த களப்பணி மூலமாக சரியான புரிதல்கள் கிடைத்ததையும், தற்போது நூலினை ஆங்கிலத்தில் எழுதிவருவதையும், களப்பணி அனுபவங்களை பௌத்த சுவட்டைத் தேடி என்ற தலைப்பில் நூலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதையும் என்னுரையில் குறிப்பிட்டேன். 

என் நினைவில் நிற்கின்ற இந்த விழாவிற்கான வாய்ப்பினைத் தந்த தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், முனைவர் சீமான் இளையராஜா உள்ளிட்ட விழாக்குழுவினர், நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், என் ஆய்விற்குத் துணை நிற்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறினேன். என்னை ஓர் ஆய்வாளனாக உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.  





முன்னதாக நாட்டுப்புறவியல் துறை உதவிப்பேராசிரியர்  சீமான் இளையராஜா வரவேற்புரையாற்றினார். மொழியியல் துறை உதவிப்பேராசிரியர் மா.இரமேஷ்குமார் நன்றியுரையாற்றினார். இலக்கியத்துறையில் முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு பயிலும் மாணவர் ச.வாசுதேவன் விழா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பல்கலைக்கழக ஆசிரியர்களும், பணியாளர்களும், மாணவர்களும், ஆய்வாளர்களும், பொதுமக்களும், உள்ளூர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.  

தொகுப்புரை வழங்கிய
முதுகலைத்தமிழ் இலக்கிய இரண்டாமாண்டு மாணவர் திரு ச.வாசுதேவன்

நன்றி:


தினமணி, 23 பிப்ரவரி 2023


தொடர்புடைய பதிவுகள்

புத்தகத் திருவிழாவில் சோழ நாட்டில் பௌத்தம், 25 பிப்ரவரி-3 மார்ச் 2023



7 ஜூன்2023இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள் முனைவர் ஐயா.

    ReplyDelete
  2. எமது வாழ்த்துகளும்...

    மேலிருந்து கீழ் நான்காவது புகைப்படம் 21 பிப்ரவரி 2023இல் என்று வரவேண்டுமா ?

    மார்ச் என்று இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பிப்ரவரி என்று திருத்திவிட்டேன். நன்றி நண்பரே.

      Delete
  3. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete

Post a Comment