களப்பணி ஆய்வுகள் : மணற்கேணி ஆய்விதழ்

1993இல் தொடங்கப்பட்ட களப்பணியின்போது ஒரு முறை கிடைத்த அனுபவம் வித்தியாசமானது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி என்று நினைவு. புத்தர் சிலை இருப்பதாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பயணம். ஆட்களே இல்லாத காட்டுப்பகுதி போன்ற இடமாக இருந்தது. ஆங்காங்கே சில மரங்கள். ஒருவரும் கண்ணுக்குத் தென்படவில்லை. சரியான உச்சி வெயில். எங்காவது புத்தர் சிலை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றேன். 1970களில்  எங்கள் ஆத்தா, “உச்சுறுமும் நேரத்திலே கொல்லப்பக்கம் போகாதீங்க” என்று சொன்னது நினைவிற்கு வந்தது. சற்றே நடுக்கம். ஒருவர் வருவது போல இருந்தது. அருகில் வந்ததும் அவர், “உங்களுக்கு பூ வாசம் தெரிகிறதா?” என்றார். “இல்லை” என்றதும், “உங்களை உரசிக்கொண்டு ரயில் போவது போல இருந்ததா?” என்றார். எனக்கு பயம் அதிகமாகவே குலதெய்வம் முதல் தெரிந்த அனைத்து சாமிகளின் பெயர்களையும் உச்சரித்துக்கொண்டே நடந்தேன். மறுபடியும் தொடர்ந்து வந்த அவர், “உங்களுக்கு ஏதாவது ஆனால் அதோ அருகில் என் வீடு உள்ளது. வாருங்கள்” என்றார். “பேய், பிசாசு அடிப்பதைப் போலக் கூறுகின்றீர்களே? சுய நினைவில் இருந்தால்தானே வரமுடியும்?” என்று நான் சொன்னதற்கு அவர் பதிலேதும் சொல்லாமல் போய்விட்டார்.  முன்னர் நான் பார்த்த திகில் திரைப்படங்கள் நினைவிற்கு வந்தன. அப்பகுதியைக் கடந்து வெளியே வரும் வரை என் உயிர் என்னிடத்தில் இல்லை. இதுபோன்ற அனுபவத்திற்குப் பிறகும் களப்பணியினைத் தொடர்ந்தேன்.  

களப்பணி அடிப்படையில் ஆய்வுகள், ஆய்வுகள் அடிப்படையில் களப்பணி ஒன்றோடொன்று தொடர்புடையனவாகும். களப்பணி தொடர்பான பொது அனுபவங்களும், ஆய்வாளராக களப்பணியில் ஈடுபட்ட தனிப்பட்ட அனுபவங்களும் வெவ்வேறு வகையில் அமையும். அதற்கான பின்புலத்தைக் காண்போம்.

கும்பகோணத்தில் எங்கள் தாத்தா ரத்தினசாமி 1960கள் தொடங்கி நவசக்தி, நாத்திகம் என்ற இதழ்களை வாங்கிவந்தார். அவர் உண்டாக்கிய பழக்கத்தில், கல்லூரிக்காலத்தில் (1975-79) தி இந்து ஆங்கில நாளிதழை வாங்க ஆரம்பித்து இன்றுவரை படித்து வருகிறேன். அதேகாலகட்டத்தில் ஆங்கிலத்தட்டச்சும், தமிழ்த்தட்டச்சும், தொடர்ந்து சுருக்கெழுத்தும் கற்க ஆரம்பித்ததால் புதிய சொற்களுக்கான பொருளை அறிந்துகொள்வதற்காக அகராதியின் துணையையும், பெரியவர்களின் துணையையும் நாடினேன். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக, தினமும் படிக்கும் நாளிதழுடன், லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ், பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் உள்ளிட்ட பல ஆங்கில இதழ்களை படிக்க ஆரம்பித்தேன். அயலக நாளிதழ்களில் வெளிவருகின்ற முக்கியமான செய்திகளை மொழிபெயர்த்து என் வலைப்பூவிலும் தமிழ் நாளிதழ்களிலும் கட்டுரையாக எழுதிவருகிறேன். இத்தேடல் தமிழ் விக்கிப்பீடியாவில் 1000 கட்டுரைகளையும், ஆங்கில விக்கிப்பீடியாவில் சுமார் 300 கட்டுரைகளையும் நான் எழுத துணையாக அமைந்தது.

இவ்வாறான வாசிப்பும், தேடலும் தொடர்ந்தபோது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக 1982இல் பணியில் சேர்ந்தேன். மதுரை காமராசர்  பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் படிப்பினை “தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்” என்ற தலைப்பிலும், முனைவர் பட்ட ஆய்வினை “சோழ நாட்டில் பௌத்தம்” என்ற தலைப்பிலும் மேற்கொண்டேன்.

1993இல் ஆய்விற்காகப் பதிவு செய்தபோது நான் பிறந்த கும்பகோணத்தில் பௌத்த சமயத்தின் இறுதிச் சுவட்டைக் குறிக்கும் ஒரு கல்வெட்டு இருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அக்கோயிலில் உள்ள செவ்வப்ப நாயக்கர் காலக் கல்வெட்டு கி.பி.1580வரை அப்பகுதியில் ஒரு பௌத்தக் கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது. இவ்வாறு தொடங்கிய களப்பணி அனுபவங்கள் வித்தியாசமானவையாகும்.

களப்பணியின்போது வழக்கமாக இரு கேமராக்கள் (அப்போது பிலிம் போடும் முறை), தொப்பி, நொறுக்குத்தீனி, குடிதண்ணீர், சாக்பீஸ், இஞ்ச் டேப், குறிப்பு நோட் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது வழக்கம். சோழ நாட்டில் புத்தர் சிலைகள் காணப்படும் இடங்கள் பட்டியலிடப்பட்டன.  இப்பட்டியலின் அடிப்படையில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. நான் ஆய்வில் அடியெடுத்துவைத்த காலத்தில் கூகுள் வரைபடம், புலனம், கைபேசி போன்ற வசதிகள் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். புத்தர் சிலைகளைப் பார்க்க சில ஊர்களில் பல கிலோமீட்டர் நடந்து சென்றதை மறக்கமுடியாது.

இவ்வாறான தேடல் சுமார் 70 புத்தர் சிலைகளைக் கண்டெடுக்க உதவியது. முதன்முதலில், மீசையோடு கண்ட புத்தரைப் பற்றிய செய்தி ஜுன் 1999இல் நாளிதழ்களில் வெளிவந்தது எனக்கு மறக்கமுடியாத அனுபவம். 2002இல் அயலக ஆய்வாளர் என்னை சந்தித்து, தன்னுடைய கட்டுரையில் என் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேட்டினை மேற்கோளாகக் காட்டியிருந்தார் (Fukuroi Yuko,  "The Latest Buddhist Art in South India - A Report on the Buddhist Sculptures from Tamil Nadu", INDO-KOKO-KENKYU-Indian Archaeological Studies, Volume 23,Indian Archaeological Society, Tokyo, June 2002). இதே காலகட்டத்தில் வரலாற்றறிஞர் பீட்டர் ஷாக் அவர்களுடன் ஆய்வு தொடர்பாக கடிதத் தொடர்பு வைத்திருந்தேன். அவர் பிற ஆசிரியர்களுடன் எழுதிய நூலில் மீசை புத்தர் பற்றிய செய்தி மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்தது. (Buddhism among Tamils in Pre-Colonial Tamilakam and Ilam : The Period of the Imperial Colar: Part 2 (Historia Religionum 20, Ed: Peter Schalk, A.Veluppillai and Ira Nakacami, 2002).

தொடர்ந்து காலச்சுவடு (ரவிக்குமார், புத்தர் தேசம், காலச்சுவடு, ஜுலை 2004) Outlook (S.Anand, Bodhi’s Afterglow, Outlook, July 2004) இதழ்கள் மற்றும் பல நூல்களிலும் என் ஆய்வு மேற்கோளாகக் காண்பிக்கப்பட்டு வருகிறது.  பிற அறிஞர்கள் நூலிலிருந்து தரவுகளைத் திரட்டி அதன் அடிப்படையில் ஆரம்ப காலத்தில் சென்றேன். 

தற்போது என்னுடைய அத்தகைய ஆய்வுகள் பிற அறிஞர்களின் நூல்களில் மேற்கோளாகக் காண்கிறேன். இவற்றை என் களப்பணிக்கும், ஆய்விற்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

மணற்கேணி ஆய்விதழ் நடத்திவருகின்ற இணைய வழி உரையங்கில் களப்பணி ஆய்வுகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் சுருக்கம். வாய்ப்பினைத் தந்த மணற்கேணி இதழுக்கு நன்றி.

உரையைக் கேட்க : களப்பணி ஆய்வுகள்

என் எழுத்தினையும் ஆய்வினையும் பற்றி, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு, தற்போது ஆசிரியராகப் பணியாற்றுகின்ற நண்பரின் முகநூல் பதிவு.

பிற யுட்யூப் பதிவுகள்

1.வேர்கள் மாதாந்திரச் சொற்பொழிவு/பொன்னி நாட்டில் பௌத்தம் - ஜம்புலிங்கம் சிறப்புரை | வேர்கள் | B Jambulingam speech/30.11.2018 


2.திரிபீடக தமிழ் நிறுவனம் – சென்னை ‘மானுடம் தேடும் அறம்’ உரை 1/சோழ நாட்டில் பௌத்த களப்பணி முனைவர் ஜம்புலிங்கம்/27.8.2020 (உரை 27.6.2020)


3.அகிம்சை நடையின் இணைவோம் இணைய வழியால் 4/முனைவர் ஜம்புலிங்கம் களப்பணியில் சமணம்/9.8.2020


4.விக்கிப்பீடியாவில்தமிழகக் கோவில்கள் - அனுபவக் கட்டுரைகள்| GCHRG WEBINARS 2020| PART-3 | Webinar 8/6.9.2020


5.புதுவைத் தமிழாசிரியர்கள்-மின்முற்றம்-122 “பொன்னி நாட்டில் பௌத்தம்” முனைவர் ஜம்புலிங்கம்/16.11.2020 


1 டிசம்பர் 2020இல் மேம்படுத்தப்பட்டது

Comments

  1. வாழ்த்துகள் ஐயா...

    உரையாடல் காணொளியை இணைக்கலாமே ஐயா...

    ReplyDelete
  2. முனைவர் அவர்களின் மகத்தான பணி இன்னும் தொடரட்டும் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. அருமை ஐயா, புத்தர் சிலை ஆய்வு, விக்கி பீடியா இரண்டிலும் தங்களுக்கு மகத்தான இடம் உண்டு. தமிழர்கள் உங்களுக்குக் கடமைப் பட்டவர்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  4. தங்களின் தேடல் தொடரட்டும் ஐயா
    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஐயா! உங்களின் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது! அதனை விட அதிகமாய் உங்கள் எழுத்தும்!

    ReplyDelete

Post a Comment