சமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் களப்பணியின்போது புத்தர் என்று கூறப்பட்ட சமணர் சிலையை அடஞ்சூரில் பார்த்தோம். அச்சிலையின் புகைப்படம் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலரில் செய்தியாக வெளியானதும், அது ஒன்றே தற்போது சான்றாக இருப்பதும் மறக்க முடியாத அனுபவமாகும். 

28 மார்ச் 2003
தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் பூதலூரைச் சேர்ந்த திரு வீரமணி பூதலூர் பகுதியில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறினார். ஆய்வின்போது பல நண்பர்களும், அறிஞர்களும், மாணவர்களும் இவ்வாறாக உதவி செய்து வந்துள்ளனர். அவ்வகையில் அவர் கூறிய புத்தர் சிலையைப் பார்க்கத் தயாரானேன்.

1 ஏப்ரல் 2003
மறுநாளே அச்சிலையைப் பார்க்கலாமென முடிவெடுத்தோம். அதன்படி அவருடன் அடஞ்சூர் சென்றேன். பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூரிலிருந்து 5 கிமீ தொலைவில் சிவந்தி திடல் அருகே உள்ள அடஞ்சூர் உள்ளது. சிவந்தி திடல் அருகே 2 கிமீ தொலைவில் உள்ள காத்தவராயன் கோயில் எனப்படும் நல்லகூத்த அய்யனார் கோயிலில் அமர்ந்த நிலையிலான சிலையைக் காண்பித்தார். அருகில் உள்ளோர் அச்சிலையை புத்தர் என்றனர். ஆனார் அது சமண தீர்த்தங்கரரான மகாவீரரன்  சிற்பம் என்பதை அறிந்தோம். புத்தரைத் தேடிச் சென்று சமணரைப் பார்த்தது ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர்
   
ஜுலை 2003
சிலையைச் சென்று பார்த்த அனுபவம் பற்றி நான் எழுதிய பதிவு தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலரில் வெளியானது. 

20 நவம்பர் 2011
திரு தில்லை கோவிந்தராஜன், திரு கருணாநிதி மற்றும் பேராசிரியர் லட்சுமணமூர்த்தியுடன் பூதலூர், திருவையாறு வட்டங்களில் களப்பணி மேற்கொண்டபோது அடஞ்சூர் சென்றோம்.  ஏப்ரல் 2003இல் திரு வீரமணி உதவியுடன் வந்து அச்சிற்பத்தைப் பார்த்தது எனக்கு நினைவிற்கு வந்தது. காத்தவராயன் கோயில் எனப்படும் நல்லகூத்த அய்யனார் கோயிலுக்குச் செல்வதற்காக விசாரித்துக் கொண்டே சென்றபோது அங்கிருந்த சிலர் வேறு ஒரு கோயிலை அடையாளம் காட்ட அங்கு சென்றுவிட்டோம். கோயிலை நெருங்க நெருங்க இருட்ட ஆரம்பித்துவிட்டது. நான் பார்த்த கோயில் அது இல்லை என உறுதியாகத் தெரிவதற்குள் அதிகம் இருட்டாகிவிட்டது. செல்வதும் கடினம், இனி சென்றால் சிற்பம் இருந்தாலும் தெளிவாகப் பார்க்கமுடியாது என்ற நிலையில் பேராசிரியர் லட்சுமணமூர்த்தி அவர்களிடம் அச்சிற்பம் மற்றும் கோயில் பற்றிய விவரங்களைக் கூறிவிட்டு, நாங்கள் மூவரும் தஞ்சாவூரை நோக்கித் திரும்பினோம். அப்போது அவர் தனக்குத் தெரிந்தவர்கள் அங்கிருக்கின்றார்களா என விசாரித்து எப்படியும் சிற்பம் பற்றியத் தகவலைத் தெரிவிப்பதாகக் கூறினார். நன்றிகூறிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் ஒரு விஷ்ணு சிற்பத்தைக் காண்பித்தார் உடன்வந்த திரு கருணாநிதி.(களப்பணி முடிந்து சில நாள்கள் கழித்து அச்சிற்பம் பற்றி பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டார்). ஒரே நாளில் பல சிற்பங்களைப் பார்த்த நிறைவுடன் தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம். நான் வீட்டில் நுழைந்தபோது, எப்போது வந்தாலும் உடன் பேசச்சொல்லி  பேராசிரியர் லட்சுமணமூர்த்தி தொலைபேசியில் கூறியதாக என் மனைவி கூறினார். அவரைத் தொடர்பு கொண்டேன். நாங்கள் திரும்பியபின் உடனே அவர் அந்த இருட்டிலும் நண்பர்கள் உதவியுடன் அக்கோயிலுக்குச் சென்றதாகவும், அச்சிற்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப் போய்விட்டதாகவும் கூறினார். இச்செய்தியை திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களிடம் தெரிவித்தபோது, அதன் புகைப்படமாவது கிடைக்குமா என்றார். தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலரில் ஜுன் 2003இல் நான் எழுதிய கட்டுரையில் அப்புகைப்படம் உள்ளதைப்பற்றி கூறியபோது சமாதானமானார் அவர். 


2018இல் பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட குறுந்தகடு
புத்தர் சிலையைப் பார்க்கச் சென்று சமண சிலையைப் பார்க்கும் வாய்ப்பு பல இடங்களில் கிடைத்தது. அவ்வாறான சிலைகளில் இச்சிலையும் ஒன்று.   கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் பார்த்த சிலை மறைந்துவிட்டதை எண்ணியபோது வருத்தமாக இருந்தது. செய்தி மலரில் வெளிவந்த அந்த புகைப்படம் மட்டுமே அந்த சிலை இருந்ததற்கான சான்றாக அமைந்தது. அண்மையில் பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள குறுந்தகட்டில் (நான் தந்த செய்தியின் அடிப்படையில்) இச் சிலையைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது.

24  மே 2018
திரு சி.வீரமணி அவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழக அகராதியியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 15 வருடங்களுக்குப் பிறகு அவருடன் தொடர்புகொண்டு 2003இல் இந்த சிலையை பார்க்கச் சென்ற அனுபவத்தையும், இப்பதிவினைப் பற்றியும் பகிர்ந்தேன். மற்றொரு மறக்கமுடியா அனுபவம். (அப்போது அவர் தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்ததைத் தெரிவித்தார்)

நன்றி
களப்பணியில் உடன் வந்த நண்பர்கள்
தமிழ்ப்பல்கலைக்கழகம்
பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்

துணை நின்றவை
பௌத்தம் களப்பணி, தொகுதி 5, பக்கம். 143
பௌத்தம் களப்பணி, தொகுதி 7, பக்கம். 231


Abstract of the article
During field study, in 2003, had the chance of seeing a Jain Tirtankara, which was called as Buddha, in Adanjur. The experience was shared in the Tamil University News Bulletin. During subsequent visit in 2011, came to know that it was lost. The photograph which was taken by me during that time is found, among others, in the DVD ROM entitled Jain sites of Tamil Nadu published by French Institute of Pondicherry.   

பகிர்ந்துகொள்ள மற்றொரு செய்தி
திரு செந்தில்குமார் அவர்களுடன், 14 மே 2018
தமிழை நேசிக்கும் இதயத்துடன் (தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில் குமார் அவர்களுடன்) இனிய மாலைப்பொழுது. பரந்துபட்ட அவருடைய வாசிப்பும், பேச்சும் வியக்க வைத்தன. வாழ்வியல் களஞ்சியம், அறிவியல் களஞ்சியம் உள்ளிட்ட தமிழ்ப்பல்கலைக்கழகப் பல்கலைக்கழக வெளியீடுகளின் முக்கியத்துவம், தமிழ் இலக்கியங்களை தமிழார்வத்தை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லும் பரந்துபட்ட எண்ணம், மாணவர்களை ஊக்குவிக்கின்ற பேச்சு ஆகியவற்றில் தொடங்கி விக்கிபீடியா தொடர்பான என் பதிவுகள், பௌத்தக் களப்பணி மற்றும் ஆய்வு தொடர்பாக நல்லதொரு விவாதம். (நன்றி: திரு கரந்தை ஜெயக்குமார்)



14 மே 2018இல் மேம்படுத்தப்பட்டது

Comments

  1. தங்களது தேடுதல் பணி குறித்த அனுபவங்கள் இன்னும் வரட்டும். வாழ்க நலம்.

    ReplyDelete
  2. தங்களின் தேடல் தொடரட்டும் ஐயா

    ReplyDelete
  3. தங்களின் தேடலும், ஆய்வும் தொடரட்டும் ஐயா! வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. மென்மேலும் தொடரட்டும் தங்கள் ஆய்வு மற்றும் களப்பணி ஐயா...சிறந்த முயற்சி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  5. சுவாரஸ்யமான தகவல்கள். உங்கள் ஆர்வமும் ஆய்வும் தொடரட்டும்.

    ReplyDelete
  6. காணாமல் போன சிலைகள் இன்னும் எத்தனையோ ? -ஆவணப்படுத்தியமைக்கு நன்றி.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இம்மாதிரி தெரியாமல் புதைந்திருக்கும் சிலைகளும் காணாமல் போன சிலைகளும் இன்னும் எத்தனையோ ? தங்கள் பணி தொடரரட்டும்,

    ReplyDelete
  8. எனக்கு சமணர் சிலைக்கும் புத்தர் சிலைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை முன்பே ஒரு முறை இதுபற்றிக் கேட்டதாக நினவு

    ReplyDelete
    Replies
    1. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகளில் பெரும்பாலானவை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளன. நின்ற நிலையில் உள்ள சிலைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அமர்ந்த நிலையில் தியான கோலத்திலுள்ள புத்தர் சிலைகளில் உஷ்னிஷா எனப்படும் தீச்சுடருடன் கூடிய முடி அமைப்பு, சற்றே மூடிய கண்கள், அமைதி தவழும் முகம், நீண்டு வளர்ந்த காதுகள், மேலாடை, கையில் தர்மசக்கரக்குறி, நெற்றியில் திலகக்குறி போன்றவை காணப்படுகின்றன. இவற்றில் சில கூறுகள் சில சிலைகளில் விடுபட்டு இருப்பதைக் காணமுடியும். சமண தீர்த்தங்கரரைப் பொருத்தவரை முக்குடை, திகம்பரமேனி, இரு புறமும் யட்சர்கள் போன்ற பொதுமைக் கூறுகளைக் காணமுடியும். நேரில் சிலைகளைப் பார்த்துவிட்டு புத்தரா சமணரா என்பதை உறுதி செய்வது நலம். ஏனென்றால் மிக நுண்ணிய வேறுபாடு நம்மை ஏமாற்றிவிட வாய்ப்புண்டு. ..

      Delete
  9. தங்கள் தேடலும்
    திரட்டி வெளியிடுதலும்
    தமிழை அடையாளப்படுத்த
    சிறந்த பங்களிப்புச் செய்யும்
    பாராட்டுகள்

    ReplyDelete
  10. So Excellent effort of you sir towards the culture of thissoil

    ReplyDelete
  11. அடஞ்சூர் சமணர் சிலை பற்றிய செய்தி பற்றிய சிறப்பான பதிவு. தஞ்சை காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார் IPS பற்றிய செய்தியும் சுவாரஸ்யம் மிக்கது.

    ReplyDelete
  12. மிக அருமை ஐயா

    ReplyDelete

Post a Comment