சோழர் காலத்தில் சிறந்தோங்கிய சமணம் : இந்து தமிழ் திசை

5 பிப்ரவரி 2020 ஆம் நாளன்று தஞ்சாவூரில் நடைபெற்ற பெரிய கோயில் குடமுழுக்கு  நினைவாக, இந்து தமிழ் திசை இதழ் வெளியிட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா இணைப்பில் வெளியான சோழர் காலத்தில் சிறந்தோங்கிய சமணம் என்ற என் கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.

1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்வு தொடர்பாக புத்தர் சிலைகளைத் தேடி களப்பணி மேற்கொண்டபோது சமண தீர்த்தங்கரர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சோழர் காலத்தில் சமணம் செழித்திருந்ததை எடுத்துரைக்கும் சான்றுகளாக இச்சிலைகள் உள்ளன.  




கி.பி.10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலைகள் 24ஆவது சமண தீர்த்தங்கரரான மகாவீரர் சிலைகளாகும்.   ஜெயங்கொண்டம் (1998), காரியாங்குடி (1998), ஆலங்குடிப்பட்டி (1999), செங்கங்காடு (1999), தஞ்சாவூர் (1999),  பெருமத்தூர் (1999), அடஞ்சூர் (2003), செருமாக்கநல்லூர்  (2009), சுரைக்குடிப்பட்டி (2010), பஞ்சநதிக்குளம் (2010),  தோலி (2011),  கவிநாடு (2013), நாட்டாணி (2015) ஆகிய இடங்களில் உள்ளன. இவை தனியாகவும் முனைவர் சந்திரபோஸ், முனைவர் மணி.மாறன், திரு தில்லை. கோவிந்தராஜன், முனைவர் வீரமணி உள்ளிட்ட  ஆய்வாளர்கள் மற்றும் நண்பர்கள் துணையோடும்   கண்டுபிடிக்கப்பட்டன. இவை திகம்பர மேனியாக, அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளன. பெரும்பாலும் முக்குடையுடன் காணப்படுகின்ற இச்சிலைகளில் யட்சர்கள் உள்ளனர்.  இச்சிலைகள் அனைத்தும் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகும்.

ஜெயங்கொண்டம் (1998): ஜெயங்கொண்டத்தில் வெள்ளாளத்தெரு-கோனார் தெரு சந்திப்பில், ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையைக் காணமுடிந்தது. அச்சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் முக்குடையுடன் இருந்தது.

காரியாங்குடி (1998): வேதாரண்யம் பகுதியில் திருவாரூர்-தப்ளாம்புலியூர் சாலையில் தப்ளாம்புலியூர் என்னுமிடத்தில் வயல் வரப்பில் ஒரு சமணர் சிலையைக் காணமுடிந்தது. அதனை அப்பகுதியில் புத்தர் எனக் கூறிவருகின்றனர்.

ஆலங்குடிப்பட்டி (1999) :  மயிலை சீனி வேங்கடசாமி புத்தர் சிலைகள் உள்ள இடங்களில் ஒன்றாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடிப்பட்டியைக் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் களப்பணி சென்றபோது கோட்டைமேடு என்னுமிடத்தில் சமண தீர்த்தங்கரர் சிலையை காண முடிந்தது. அந்தச் சமணரைச் சிவநாதர் என்று கூறுகின்றனர்.
.
பெருமத்தூர் (1999): பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூர் என்னுமிடத்தில் சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அதனை புத்தர் என்று கூறிவருகின்றனர்.

செங்கங்காடு (1999): வேதாரண்யம் பகுதியில் செங்கங்காடு அருகே வேம்பழகன்காடு என்னுமிடத்தில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி சென்றபோது, புத்தர் என வழிபடப்பட்டு வருகின்ற, ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையைக் காணமுடிந்தது.

தஞ்சாவூர் (1999): தஞ்சாவூர் மேலவீதி-வடக்குவீதி சந்திப்பில் மூலை அனுமார் கோயில் பின்புறம் ஒரு சமண தீர்த்ததங்கரர் சிலையைக் காணமுடிந்தது. எவ்விதப் பராமரிப்புமின்றி அந்த சிலை இருப்பதைக் காணமுடிந்தது.

அடஞ்சூர் (2003):  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் அருகே உள்ள அடஞ்சூர் என்னும் கிராமத்தில் இரண்டு அடி உயரமுள்ள சமணர் சிலை சிவந்திதிடல் அருகே உள்ள நல்லகூத்த அய்யனார் கோயிலில் இருந்தது. அதனை புத்தர் என்று வழிபடுவதைக் காணமுடிந்தது.

செருமாக்கநல்லூர் (2009)தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் செருமாக்கநல்லூரில் சபரிமூக்காயி அம்மன் திடலில் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையினைக் காணமுடிந்தது. இந்த சிலையினை உள்ளூர் மக்கள் கருப்பசாமி எனப் பெயரிட்டு வணங்கிவருகின்றனர்.

சுரைக்குடிப்பட்டி (2010): தஞ்சை மாவட்டம்  பூதலூர் அருகே சுரைக்குடிபட்டி கிராமத்தில் அய்யனார் கோயிலில் வழிபாட்டில் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது.

பஞ்சநதிக்குளம் (2010): வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் முள்ளியாற்றுக்குள் பீடத்துடன் சமணர் சிலையைக் காணமுடிந்தது.  தலைப்பகுதி இல்லாமல் அந்த சமணர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்தது.

தோலி (2011): திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தோலி கிராமத்தில் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையைக் காணமுடிந்தது. பிற சமண தீர்த்தங்கரர் சிலைகளுக்குள்ள கூறுகள் இதில் உள்ளன.

கவிநாடு (2013): புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் கட்டியாவயல் அருகே உள்ள கவிநாடு கண்மாயில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் அங்கு சென்றபோது அது சமணர் சிலை என்பதை அறியமுடிந்தது.

நாட்டாணி (2015): புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட நாட்டாணி கிராமத்தில் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரர் சிலையைக் காணமுடிந்தது. பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள அந்தச் சிலையை புத்தர் என்று கூறிவருகின்றனர். 
இவ்வாறாக இப்பகுதியில் காணப்பட்ட சிலைகள் அனைத்துமே சோழர் காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. இவை பௌத்தத்தினைப் போலவே சமணமும்  சோழர் காலத்தில் நல்ல நிலையில் உணர்த்துகின்ற சான்றுகளாக உள்ளன.

Comments

  1. சிறப்பான தகவல்கள் ஐயா...

    ReplyDelete
  2. தங்களது பணி மென்மேலும் சிறக்க இறையருள் கிடைக்கட்டும்...

    ReplyDelete
  3. குடமுழுக்கு விழா இதழ் இணைப்பிலேயே தங்களின் கட்டுரையினை வாசித்து மகிழ்ந்தேன் ஐயா
    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. சோழர் காலத்தில் சமணம் - எத்தனை விரிவான தகவல்கள்... நாளிதழில் வெளியானதற்கு வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  5. ஆச்சரியமான தகவல்கள். நன்றி

    ReplyDelete
  6. நல்லதொரு கட்டுரை.

    ReplyDelete
  7. நன்றி அய்யா, நான் அந்த இதழைப் படித்துவிட்டேன்

    ReplyDelete
  8. இந்து தமிழ் திசை நாளிதழுக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி அய்யா - தஞ்சை அப்பா ண்டை ராஜ்

    ReplyDelete
  9. K.Sridharan (thro' email: sridharmythily@gmail.com)
    Useful article with lot of information..sridaran.

    ReplyDelete
  10. மிகவும் அருமையான ஆய்வுக்கட்டுரை. அயயா அவர்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. Excellent Article, listing the Thirthankar Idols in the Chola country is good, Thanks, Regards...

    ReplyDelete

Post a Comment