பௌத்த சுவட்டைத் தேடி : சுத்தமல்லி

21 மற்றும் 23 ஆகஸ்டு 1999
பௌத்த ஆய்வு தொடர்பாக களப்பணி மேற்கொண்டபோது தமிழகத்திலுள்ள பல அருங்காட்சியகங்களுக்குச் சென்று சோழ நாட்டு புத்தர் சிலைகள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கச் சென்றேன். களத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவத்திலிருந்து வித்தியாசமானது அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவம். அவ்வகையில் சுத்தமல்லி சிலையைக் கண்டேன். இந்த சுத்தமல்லி எந்த மாவட்டத்தில் தற்பொழுது உள்ளது என்ற ஆர்வத்தை உண்டாக்கியது இந்தப் பயணம். மற்ற புத்தர் சிலைகளிலிருந்து சற்று வித்தியாசமான நிலையில் இந்த புத்தர். வாருங்கள் பார்ப்போம். 
சுத்தமல்லி புத்தர், அரசு அருங்காட்சியகம், சென்னை
(புகைப்படம் : பா.ஜம்புலிங்கம், 1999)
சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகம் சென்றபோது சோழ நாடு தொடர்பான மூன்று புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. அவை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவலஞ்சுழி (நின்ற நிலை புத்தர்), எரையூர் (அமர்ந்த நிலை) மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுத்தமல்லி (அமர்ந்த நிலை) என்ற குறிப்புடன் இருந்தன. முதன்முதலாக நின்ற நிலையிலான புத்தரின் கற்சிலையை அங்குதான் கண்டேன். சுத்தமல்லி புத்தர் சிலை 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்ற குறிப்போடு (Accession No.1432/62) காணப்பட்டது. தஞ்சாவூர் (தஞ்சாவூர், நாகபட்டினம், திருவாரூர்) மற்றும் திருச்சி (திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர்) மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது பல இடங்களின் மாவட்டங்கள் மாறியுள்ள நிலையில் சுத்தமல்லி தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது என்பதைக் காண வேண்டியுள்ளது.  

18 அக்டோபர் 2010
பிறிதொரு பணிக்காக சென்னை சென்றபோது அருங்காட்சியகம் சென்றேன். சோழ நாட்டைச் சார்ந்த, முன்னர் பார்த்த மூன்று  புத்தர் சிலைகளை மறுபடியும் கண்டேன். 

எரையூர் (திருவாரூர் மாவட்டம்): மயிலை சீனி.வேங்கடசாமி உள்ளிட்ட பல அறிஞர்கள் இச்சிலையைப் பற்றி விவாதித்துள்ளனர். எலயனூர், எலையூர் என்ற பலவாறான நிலையில் இந்த ஊரின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. 

திருவலஞ்சுழி (தஞ்சாவூர் மாவட்டம்): மயிலை சீனி.வேங்கடசாமி உள்ளிட்ட பல அறிஞர்கள் இச்சிலையைப் பற்றி விவாதித்துள்ளனர். 

சுத்தமல்லி (அரியலூர் மாவட்டம்):  மாவட்டங்கள் பிரிப்பு என்ற நிலையில் இச்சிலை இருந்த இடம் தற்போது அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.  மார்பில் மேலாடை, தலையில் தீச்சுடர் வடிவில் சுருள் முடி போன்றவை சோழ நாட்டில் பிற புத்தர் சிலைகளில் காணப்படுவதைப் போன்றே உள்ளன. சிலையின் இரு புறமும் (சமண தீர்த்தங்கரர் சிலைகளில் காணப்படுவது போன்று) யட்சர்கள் காணப்படுகின்றனர். அந்த நிலையில் இந்த சிலையில் வித்தியாசமாக உள்ளது. குழுமணி, மன்னார்குடி, கிள்ளியூர் போன்ற இடங்களில் உள்ள புத்தர் சிலைகள் சற்றொப்ப இச்சிலையைப் போலவே உள்ளன. அந்த நிலையில் இச்சிலை சற்று வித்தியாசமாக உள்ளது. புத்தர் சிலைகளில் சில வித்தியாசமான கூறுகளை இவ்வாறான களப்பணிகள் மூலமாகவே உணரமுடிகிறது. 

இந்த ஊர் உடையார்பாளையம் வட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ளதாக சிவராமலிங்கம் தன் நூலில் (Archaeological Atlas of the antique remains of Buddhism in Tamil Nadu, p.111) குறிப்பிட்டுள்ளார். மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் முன்னர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுத்தமல்லி தற்போது அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம். இருந்தாலும் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ள களப்பணி மூலமாக இது உறுதி செய்யப்படும். 


துணை நின்றவை : 
களப்பணி தொகுதி 4, பக்.283,285  
களப்பணி தொகுதி 7, பக்.147  

Comments

  1. #இது உறுதி செய்யப்படும்#
    சீக்கிரம் உறுதி செய்ங்க ,அது சுத்த மல்லியா ,வாடா மல்லியா என்று :)

    ReplyDelete
  2. தங்களின் அயரா பணி போற்றுதலுக்கு உரியது ஐயா

    ReplyDelete
  3. சுத்தமல்லி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தைச் சார்ந்த ஊர்தான். சித்தமல்லி என்று இன்று பேச்சுவழக்கில் வழங்கப்படும். விக்கிரமங்கலத்திலும் ஒரு பௌத்தர் சிலையோ, சமணர் சிலையோ உள்ளது. அந்தச் சிலையில் காதில் உள்ள துளையில் மாட்டைக் கட்டிவைத்திருந்தனர். பின்னர் இந்த நிலை மாறியது. வழியில் செல்பவர்கள் இந்தச் சிலையின் மீது வெற்றிலைப்பாக்கு போட்ட எச்சிலை உமிழ்ந்து செல்வார்கள் என்று மக்கள் வழக்கில் அறிந்தேன். இது சமயக்காழ்ப்பில் முளைத்த செயலாக இருக்கலாம். தங்களைப் போன்றவர்கள் இதனை ஆராய்ந்து உறுதிப்படுத்தவேண்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. //அந்தச் சிலையில் காதில் உள்ள துளையில் மாட்டைக் கட்டிவைத்திருந்தனர். பின்னர் இந்த நிலை மாறியது. வழியில் செல்பவர்கள் இந்தச் சிலையின் மீது வெற்றிலைப்பாக்கு போட்ட எச்சிலை உமிழ்ந்து செல்வார்கள்// எத்தனை கொடுமையான செயல் இது? வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  5. சிலையின் வடிவம் கொண்டு செதுக்கப்பட்ட காலம் தெரிய வருமா?ஒரு சாதாரணனாக தீர்த்தங்கரர் மற்றும் புத்தர் சிலைக்கும் அதிக வேறு பாடுகள் தெரிவதில்லை. தொடரட்டும் உங்கள் களப்பணி.

    ReplyDelete
  6. சுத்தமல்லி புத்தர் சிலை ஆய்வுப் பணி தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. தொடரட்டும் உங்கள் சீரிய பணி. வாழ்த்துகள்.

    த.ம. +1

    ReplyDelete
  8. வணக்கம் அருமை அந்த அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவன் நான்.எங்கள் ஊரில் இருந்த அந்த புத்த சிலையை சென்னைக்கு கொண்டு சென்றனர் என்று என் பாட்டனார் அடிக்கடி சொல்ல கேட்டுள்ளேன். எங்கள் ஊரில் இருக்க வேண்டிய கலைப்பொக்கிஷம் இன்று எங்கேயோ ஓர் மூலையில். அந்த சிலையை ஏற்ற முடியாமல் கயிறு கட்டி இழுத்ததால் அதன் மூக்குப்பகுதி கொஞ்சம் சிதிலமடைந்திருக்குமாம் . என் ஊர் பெயர் ஜெமீன். சுத்தமல்லி என்று அழைத்தால்தான் அனைவருக்கும் தெரியும். இங்கு பல சுத்தமல்லி உண்டு. சித்தமல்லி என்று பாமரர் அழைப்பர்.ஜெயங்கொண்டத்தில் கூட தற்போது ஒரு புத்தர் சிலை உள்ளது. ஆய்வு தொடர வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், ஜெயங்கொண்டத்தில் எங்கே உள்ளது என்று தெரிந்துக்கொள்ள ஆவல். தகவல் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

      Delete
    2. மரியாதைக்குரிய அய்யா ஜம்புலிங்கத்தின் ஒவ்வொரு பதிவும் வரலாற்றில் மிகவும் முக்கியம்.

      Delete
  9. ஜெமீன் சுத்தமல்லி மேல்நிலைப் பள்ளி இருக்கும் இடத்தில் அக்காலத்தில் இந்த சிலை இருந்தது.

    ReplyDelete

Post a Comment