தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் : பிக்கு மௌரியார் புத்தா

அண்மையில் நான் படித்த நூல் மதிப்பிற்பிற்குரிய பிக்கு மௌரியா புத்தர் அவர்களால் தொகுக்கப்பட்ட தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள். பௌத்தக் களப்பணி தொடர்பாக தமிழில் குறிப்பிடத்தக்க நூலாக அமைந்துள்ள இந்நூலை 27 மே 2017 அன்று பிக்கு அவர்கள் நேரில் என் இல்லத்திற்கு வந்து, தந்து என் ஆய்வு பற்றி விசாரித்தார். அவருக்கு நன்றி. 

"தொல்லியல் ஆய்வாளர் கன்னிங்காம்தான் முதன்முதலில் தொல்லியல் ஆய்வுகளில் பௌத்த அடையாளங்களையும் கற்றூண்களையும் மண்ணிலிருந்து வெளிக்கொண்டு வந்தவர்...அவர் செய்த அகழாய்வுகள் பௌத்த நெறியைச் சார்ந்ததாக இருந்தது...அதன் பிறகு பௌத்த அகழாய்வு ஆசிரியர்கள் நமக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை." என்று தன்னுடைய ஆதங்கத்தைக் கூறுகிறார் தொகுப்பாசிரியர் வணக்கத்திற்குரிய பிக்கு மௌரியா புத்தா. 
இந்நூலில் புத்துயிர் பெறும் பௌத்தம், வேரூன்றி படர்ந்து வளர்த்த பௌத்தம் (பிக்கு மௌரியார் புத்தா), பௌத்தரின் குகைகள், கற்றூண் சிற்பங்கள், புனித தலங்களின் அழிப்பும் பௌத்தர்களின் பாராமுகமும், அலட்சியமும் (தமிழாக்கம் தொல்லியன்), தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் (இளம்போதி),களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகள் (பா.ஜம்புலிங்கம்), புத்தர்களைக் காப்போம் (ம.செல்வபாண்டியன்), பௌத்த தமிழ்நாடு (அன்பு பொன்னோவியம்),Cultural Archaeology of Buddhism in Kerala (Ajay S Sekher) என்ற தலைப்பிலான கட்டுரைகள் அமைந்துள்ளன.

புத்துயிர் பெறும் பௌத்தம் என்ற கட்டுரையில் புத்தரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் பௌத்த நெறிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.

வேரூன்றி படர்ந்து வளர்ந்த பௌத்தம் கட்டுரையில் அசோகர் காலம் தொடங்கி தமிழகத்தில் பௌத்தம் தழைத்தோங்கிய நிலை குறித்து ஆராயப்பட்டுள்ளது. காஞ்சீபுரம், உத்திரமேரூர், உத்திரமேரூர், மதுரை என்கிற மருதை, மாங்குடி, மாங்குளம், இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, பட்டுக்கோட்டை, ஜெயங்கொண்டம், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், தியாகனூர், பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களில் பௌத்தம் இருந்ததற்கான சான்றுகளைப் பற்றியும், ஆனைமங்கலச் செப்பேடு, வேள்விக்குடி செப்பேடு, பட்டிபெரலு கல்வெட்டு, அழகன்குளம் பானை ஓட்டுக் கீறல்கள், சுடுமண் சிற்பங்களைப் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

பௌத்தரின் குகைகள், கற்றூண் சிற்பங்கள், புனித தலங்களின் அழிப்பும் பௌத்தர்களின் பாராமுகமும், அலட்சியமும் என்ற கட்டுரையில் ஒவ்வொரு பௌத்தரும் தமக்கு மிக அருகாமையில் உள்ள பௌத்த கற்றூண் சிற்பங்கள், குகைகள் மற்றும் பண்டைய கால எஞ்சியுள்ள புனிதத் தலங்களுக்கு ஒவ்வொரு முழு நிலவு (பூர்ணிமா) நாளில் சென்று வணங்க வேண்டும் என்ற அறவுரையுடன் தொடங்கி உறுப்பினர்கள் செய்யவேண்டிய பணிகளைக் குறித்த கருத்துகளும் பணிக்கான செயல்பாடு,இலக்கு, தீர்வு ஆகியவையும் உரிய மாதிரிகளோடு முன் வைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் என்ற கட்டுரையில் தமிழகமே பௌத்த தளமாகயிருந்தது என்ற கருத்து முதன்மையாக வைக்கப்பட்டு, காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் பௌத்தத்தின் தாக்கம் வேரூன்றி இருந்ததைக் குறித்து எடுத்துரைக்கிறது.

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகள் என்ற கட்டுரையில் 1993 முதல் தமிழகத்தில் ஒருங்கிணைந்த திருச்சி, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 16 புத்தர் மற்றும் 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றி ஆராய்கிறது.

புத்தர்களைக் காப்போம் என்ற கட்டுரையில் புத்தர் சிலைகள் இருக்கும் இடங்கள், சிலைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பிற இடங்களில் காணப்படுகின்ற புத்தர் சிற்பங்களைக் காத்திட நீண்ட காலத்திலும், உடனடியாகவும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் மற்றும் செயல் திட்டங்களைக் குறித்து  நுட்பமாக எடுத்துரைக்கிறது.

பௌத்த தமிழ்நாடு என்ற தலைப்பிலான கட்டுரையில் இந்தியா பௌத்த தேசமாக ஆவதற்கு முன்பே தமிழ்நாடு பௌத்தத்தின் இருப்பிடமாக ஆகிவிட்டது என்பதில் தொடங்கி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பௌத்தம் செழித்திருந்தது பற்றியும் தமிழ்நாட்டில் 60க்கும் மேற்பட்ட இடங்கள் பௌத்த மையங்களாக இருந்தமை குறித்தும்  நுணுகி ஆராயப்பட்டுள்ளது.

Cultural Archaeology of Buddhism in Kerala  என்ற கட்டுரையில் கேரளாவில் மறைந்துபோன பௌத்தம் சார்ந்த வரலாறு, தொல்லியல் ஆதாரங்களை மொழியியல், பண்பாடு, மற்றும் தொல்லியல் நோக்கில் ஆராயும் முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

கள ஆய்வினை அடிப்படையாகவும் முன்னிலைப்படுத்தியும் வெளிவருகின்ற நூல்கள் அருகியுள்ள இக்காலகட்டத்தில் பௌத்தத்திற்கு இந்நூலானது மிகச் சிறந்த ஆவணமாகத் திகழ்கின்றது. பெரும்பாலான கட்டுரைகளில் களப்பணி அடிப்படையிலான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென்னிந்திய பௌத்தத்திற்கும், குறிப்பாக தமிழக பௌத்தத்திற்கும் களப்பணி அடிப்படையில் அமைந்த ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது. பௌத்த ஆய்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் மட்டுமன்றி வரலாற்றறிஞர்களுக்கும் பௌத்தம் தொடர்பான அண்மைப் பார்வையினை அளிக்கின்ற இந்நூலை வாங்குவோம், வாசிப்போம், பாதுகாப்போம்.  





 நூல் : தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் 
பொருண்மை : கட்டுரைத் தொகுப்பு 
ஆசிரியர் : பிக்கு மௌரியார் புத்தா
வெளியிடுபவர் : புத்தர் வழி, பிரக்போதி புத்த விகார், போதி வனம், சாந்திபுரம், ஓரிக்கோட்டை அஞ்சல், இராமநாதபுரம்  623 402
விலை : ரூ.100
தொலைபேசி : 9943087674/8012985125
மின்னஞ்சல் : buddhamouriyar@gmail.com/buddhavazhi@gmail.com


புத்தர் வழி என்னும் இரு மாத இதழுக்கும் மேற்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். 



10 நவம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 11 November 2017

Comments

  1. முனைவர் அவர்களின் விரிவான அலசலும் விமர்சித்த விதமும் அருமை பகிர்ந்தமைக்கு நன்றி.
    த.ம.1

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஐயா
    தங்களின் போற்றுதலுக்கு உரிய தேடல்கள் தொடரட்டும்

    ReplyDelete
  3. இனி பௌத்தம் என்றாலேயே முனைவர் ஜம்புலிங்கமே நினைவில் வருவார் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அருமையான அறிமுகம்
    தங்கள் ஆய்வுப் பணி
    தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  5. பெளத்த நூல்கள் கிடக்குமா?

    ReplyDelete
    Replies
    1. மேற்கண்ட முகவரி, அலைபேசி, மின்னஞ்சலில் தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

      Delete

Post a Comment