வாசிப்பை நேசிப்போமே : தமிழ் அற இலக்கியங்களும், பௌத்த சமண அறங்களும்

முனைவர் பா.ஜம்புலிங்கம்

நான் படித்த  பௌத்தம் தொடர்பான நூல்களில் ஒன்று  முனைவர் சு.மாதவன் எழுதியுள்ள தமிழ் அற இலக்கியங்களும், பௌத்த சமண அறங்களும். தான் மேற்கொண்ட ஆய்வினை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்கில் நூலாக்கித் தந்துள்ளது பாராட்டத் தக்கதாகும். தமிழில் காப்பிய ஆய்வுகள் பௌத்த, சமணப் பின்னணியில் வந்துள்ள அளவுக்குத் தமிழ் அற இலக்கியங்கள் குறித்து ஆய்வுகள் வரவில்லை  என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஆசிரியர்(ப.xix), இத்தகு ஆய்வுக்காகத் தான் மேற்கொண்ட முயற்சிகளை முன்வைக்கிறார். சமூக, வரலாற்று, மெய்யியல் பின்னணி (பக்.1-45), அறவியல் (பக்.46-58), பௌத்த மற்றும் சமண அறவியல் (பக்.59-161), தமிழ் அற இலக்கியங்களும், பௌத்த அறங்களும் மற்றும் சமண அறங்களும் (பக்.162-284), பொதுவியல்புகளும் சிறப்பியல்புகளும் (பக்.285-305)என்ற தலைப்புகளில் மிகவும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் இயல்களை உரிய பகுப்புகளாகப் பிரித்து விவாதிக்கிறார். தமிழ் அற இலக்கியங்கள் என்ற நிலையில் திருக்குறள், நாலடியார், பழமொழி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி மற்றும் பிற நூல்களோடு பௌத்த அறங்களையும்,  சமண அறங்களையும் ஒப்புநோக்கித் தெளிவுபடுத்துகிறார். சில ஒப்புமைகளை நாம் இங்கே காண்போம்.

அவா அறுத்தல் :
"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை/ஆண்டும் அஃதொப்பது இல்" என்ற குறள் எஃதொன்றையும் விரும்பாத தன்மையையே குறிக்கிறது. அது மட்டுமா? மேலுலகத்திலும்கூட வேண்டாமைக்கொத்த சான்று எதுவும் இல்லை. இதே கருத்தை அடிபிசகாமல் வெளிப்படுத்தியிருக்கும் தம்மபதப்பாடல் வருமாறு "உடல் நலம் பெரிய ஊதியம் ஆகும். வேண்டாமை (திருப்தி) பெரிய செல்வமாகும். நிர்வாண மோஹம் மிக உயர்ந்த சுகம் ஆகும்".  (ப.183)

தன்வினை தன்னைச்சுடும்:
"இரும்பினால் உண்டான துரு இரும்பையே அழித்துவிடுவதுபோல, தீய நெறியில் செல்வோர் தம் தீய செயல்களினால் அழிக்கப்படுகிறார்
" (தம்ம பதம்). இக்கருத்தை,"மாசுபடினும், மணிதன்சீர் குன்றாதாம்; பூசிக்கொளினும் இரும்பின்கண் மாசு ஒட்டும்; பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ்தன்னை மாசுடைமை காட்டிவிடும்
" (நான்மணிக்கடிகை) என்ற செய்யுள் அப்படியே உள்வாங்கி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.(ப.223)
       
குற்றம் கடிதல்:

சமண இல்லற நெறியினர் அனர்த்த தண்ட விரதத்தைக் கடைப்பிடிப்பர். பிறர்க்குத் தீங்கு செய்யாதிருத்தல் உட்பட ஐந்து விரதங்களைக் கொண்டது அனர்த்த தண்டவிரதம். இதை "ஐந்து அனத்த ண்ட விரதக்கு இறப்பிவை முந்துஉணர்ந்து காக்கமுறை" என்னும் அருங்கலச்செப்பு, "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக்கெடும்" என்ற குறளின் குரலோடு நெருங்கிய ஒப்புமைப் பண்பைப் பெற்றுத் திகழ்கிறது.(ப.258)
தமிழ் அற இலக்கியங்களை, பௌத்த சமண அற அறங்களோடு ஒப்புநோக்கி அறிந்துகொள்ள ஆசிரியர் அதிகமான எடுத்துக்காட்டுக்களைத் தந்துள்ளார். அடிப்படை நிலையில் அறம் என்பதற்கான பொருளில் தொடங்கி ஒட்டுமொததமாக அவர் ஆராயும்விதம் பாராட்டத்தக்கது. 
அறம் பற்றி அறியவேண்டியது இக்காலச் சுழலுக்கு மிகவும் இன்றியமையாதது. இவ்வாறான பெருமைகளைக் கொண்ட இந்நூலை வாசிப்போமே. தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும், முனைவர் சு.மாதவன் (அலைபேசி : 9751330855/9751330844), செம்மொழி, 4/1065, எம்.ஜி.ஆர்.நகர், மேலவஸ்தாச்சாவடி, தஞ்சாவூர் 613 005, 2008, பக்.364+XXXII, ரூ.250, [நூலாசிரியரின் அன்பளிப்பு]

Comments

  1. anbunirai dr.jumbulingam,
    thangal enadhu nool kuriththu,adhu paesum porul kuriththu arumayaaga arimugam seidhulleerhal.nandri.
    nirayanbudan,
    munaivar su.madhavan

    ReplyDelete
  2. தங்களின் மிகச்சிறந்த நூலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற சீரிய எண்ணமே இவ்வாறு எழுதத் தூண்டியது. அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  3. நூலறிமுகம் அருமை ஐயா. அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று. கட்டாயம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா. நன்றி

    ReplyDelete
  4. நூலறிமுகம் தங்களை நூலை வாங்க ஆர்வம் உண்டாக்கியதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  5. Nice Introduction
    The wordings are crispy, lucid and strong.
    It induces even the spectator to read the book.

    Thus the introduction by Dr.Jambulingam is nice as tastier as the sweet fruit, "Jambu"

    ReplyDelete
  6. மதிப்புரைக்கான தங்களின் மதிப்புரை அருமை. தொடர்ந்து வருகை தரவும் வாசிக்கவும் அழைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  7. தாங்கள் செய்துள்ள நூலறிமுகமும் அதற்கு நோக்கர்கள் கருத்துக்களும் பாடுபட்டமை குறித்து மனநிறைவைத் தருகின்றன ; மேலும் எழுத ஊக்குவிக்கின்றன .

    ReplyDelete
    Replies
    1. நூலாசிரியரான தங்களின் கடிதம் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

      Delete

Post a Comment