பௌத்த சுவட்டைத் தேடி : களப்பணிக் குறிப்பிலிருந்து (50ஆவது பதிவு)

முனைவர் பா.ஜம்புலிங்கம்   
வலைப்பூ தொடங்கி இது 50ஆவது பதிவாகும். இப்பதிவு ஒரு வித்தியாசமான பதிவாகும். பௌத்த ஆய்வில் 1993இல் அடியெடுத்து வைத்து கடந்த 20 ஆண்டுகளாக பல இடங்களுக்குக் களப்பணி சென்று முந்தைய அறிஞர்கள் குறிப்பிட்டிருந்த புத்தர் சிலைகளைப் பார்த்ததும், புதிய சிலைகளைக் கண்டுபிடித்ததும் எனக்கு ஓர் அரிய அனுபவம்.

சோழநாட்டில் பௌத்தம் (1999) முனைவர் பட்ட ஆய்வேட்டின் முகப்பு
 அக்டோபர் 1993இல் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக (M.Phil.,) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தபோதிலும், உரிய குறிப்புகளை எடுப்பதற்கும், களப்பணி பற்றிய பதிவுகளை மேற்கொள்வதற்கும் சில மாதங்கள் ஆயின. பின்னர் தொடர்ந்து களப்பணி விவரங்களைப் பதிய ஆரம்பித்து,  இன்றுவரை தொடர்கிறேன். அவ்வாறான ஒரு பதிவினை என் குறிப்பில் பதியப்பட்டுள்ளவாறு அப்படியே உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இப்பதிவு களப்பணிக் குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டது.

20.1.1999 களப்பணி 
சன்னாபுரம், புத்தகரம், சீயாத்தமங்கை
(களப்பணி குறிப்புகள் தொகுதி 4 பக்கம் 177)

1) சன்னாபுரம்  : நாச்சியார்கோயில்-நன்னிலம் வழியாக நாகை செல்லும் பஸ். சன்னாநல்லூர், சன்னாவூர் என்கிறார்கள். சன்னாபுரம் என்று இப்பகுதியிலோ நன்னிலம் சுற்றியோ எங்கும் இல்லை.

2) புத்தகரம் : மேற்கண்ட அதே சாலையில் நன்னிலம்-சன்னாநல்லூர் ஆலமரத்தடி ஸ்டாப் அடுத்து) புத்தகரம் உள்ளது. இந்த புத்தகரத்தை ஏனங்குடி புத்தகரம் என்று கூறுகின்றனர். இங்கு புத்தர் சிலையோ, தடயமோ எதுவும் இல்லை. திரு இராஜேந்திரன் (கிராம நிருவாக அலுவலர், ஆதலையூர், நாகை வட்டம்) அவர்களைச் சந்தித்தேன். எங்கோ புத்தர் சிலை பார்த்த நினைவு என்று கூறினார். முடிந்தால் அவருக்கு அடுத்த அறையிலிருந்த திரு பக்கிரிசாமி (கிராம நிருவாக அலுவலர், 73. புத்தகரம், நாகை தாலுக்கா) அவர்களிடமும் தெரிவிப்பதாகக் கூறினார். திரு பக்கிரிசாமியைச் சந்திக்கமுடியவில்லை. 

3) திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை)  : மேற்கண்ட நா.கோயில்-நன்னிலம்-சன்னாநல்லூர்-புத்தகரம் அடுத்து திருமருகல். அதற்கடுத்து சீயாத்தமங்கை உள்ளது. இங்கும் எங்குமே புத்தர் சிலைகளோ தடயமோ இல்லை. இங்கு ஒருவர் கீழ்க்கண்ட இரு செய்திகளைக் கூறினார்.

அ) சீயாத்தமங்கை-திருமருகல் நடந்துசென்று பின் திருமருகலில் சைக்கிள் எடுத்து ஆதீனக்குடி, கணபதிபுரம் வழியாக விச்சூர் என்றால் அங்கு ஒரு புத்தர் சிலையைக் காணலாம் என்றார். 

ஆ) வாழ்க்கை அருகே புத்தகளூர் என்ற ஊர் உள்ளது. வாழ்க்கையிலிருந்து சைக்கிளில் போகலாம் என்றார்.

அவர் சொன்னபடி உடன்வந்து அவர் சொன்ன பாதையில் திரு ஏ.ஜெயராமன் (கொள்மேடு அம்பல் போஸ்ட்) உதவியுடன்  விச்சூர் சென்றேன். ஒரு சிறிய அதிர்ச்சி. 16.1.1999 களப்பணியில் நான் புகைப்படம் எடுத்த அதே சிலை. பின்னர் கிடாமங்கலம், போலகம் வழியாக திருமருகல் திரும்பினேன். போகவர சுமார் 16 கிலோமீட்டருக்கு மேல். என் களப்பணியில் அதிக தூரம் ஒரே நேரத்தில் நடை மற்றும் சைக்கிளில்  இவ்வளவு தூரம் போனது இப்போதுதான். திருமருகல் புகைப்படக்கடை சென்று முடிந்தால் அந்த புத்தரின் படத்தை அனுப்பச் சொன்னேன். (எஸ்.பி.சரவணன், எஸ்.பி.எஸ்.கலர் போட்டோ ஸ்டுடியோ, திருமருகல்) 

செலவு விவரம்
கும்பகோணம்-நன்னிலம் - ரூ.3.25
நன்னிலம்-புத்தகரம்            - ரூ.1.75
புத்தகரம்-சீயாத்தமங்கை  - ரூ.3.00
சீயாத்தமங்கை-திருமருகல் கால் நடையாக.
திருமருகல்-நன்னிலம்      -  ரூ.3.00
நன்னிலம்-கும்பகோணம் -   ரூ.5.25

குறிப்பு : இக்களப்பயணம் மயிலைசீனி வேங்கடசாமி அவரது பௌத்தமும் தமிழும் நூலில் குறிப்பிட்டுள்ள பௌத்த மையங்களையும் தொடர்புடைய இடங்களையும் காண்பதற்காகவும், புதிய புத்தர் சிலையைக கண்டுபிடிக்கவும் மேற்கொள்ளப்பட்டது. இக்களப்பணியின்போது அதற்கு முன்னர் (16.1.1999 -மாட்டுப்பொங்கல் அன்று) கோட்டப்பாடி, திருமியச்சூர் சென்றபோது  பார்த்த புதிய புத்தர் சிலையை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வழித்தடம் தெளிவாகத் தெரியாத நிலையில் ஒரு புதிய புத்தர் சிலையை அடுத்தடுத்து மூன்று நாள்களுக்குள்  இரு முறை பார்க்கும் நிலை ஏற்பட்டது.         
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் அறவுரை


அறம் செய்பவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான், மறுமையிலும் மகிழ்ச்சியடைகிறான். அவன் இருமையிலும் இன்பமடைகிறான். அவன் தன் அறச்செயல்களைக் கண்டு மகிழ்கிறான், இன்புறுகிறான். -தம்ம பதம்  16

சூழல்

சாவத்தியில் தம்மிகன் என்பவன் தன் வாழ்நாள் முழுதும் அறச்செயல்களையே செய்து வந்தான். எனவே அவன் மனம் தெளிவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவனது இறுதி நாளிலே மரணப்படுக்கையில் இருக்கும்பொழுது புத்த பிக்குகளை அழைத்துச் சத்தங்களை இசைக்கச் சொல்லிக் கேட்டிருந்தான். அப்பொழுது வானத்திலிருந்து தேவர்கள் அவனுக்கு மலர்த்தேர் கொண்டுவந்து அவனை அழைத்தனர். சத்தங்களைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் தேவர்களைச் சற்று நிற்கும்படிக் கேட்டுக் கொண்டான். இக்காட்சி பற்றி அறியாத பிக்குகள் தாங்கள் பாடுவதை நிறுத்தச் சொல்வதாகக் கருதி மனவருத்தத்துடன் நிறுத்திவிட்டனர். இதுபற்றி அவர்கள் புத்தரிடம் முறையிட புத்தர் உண்மையைத் தெளிவுபடுத்தி இப்பாடலைக் கூறினார்.  

(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)  


In search of imprints of Buddha: From the records of field work 
Though I joined M.Phil., (Madurai Kamaraj University) during October 1993, I started taking down notes and information on Buddha statues some months later. One such is shared here. English version of the article will appear on 15th of this month.
-----------------------------------------------------------------------------------------------------------------------
கீழ்க்கண்ட முகநூலில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் தொடர்பான செய்திகளைக் காணலாம் : http://www.facebook.com/buddhismincholacountry.

Comments

  1. தங்களின் களப்பணிக் குறிப்புகள் வியப்பை ஏற்படுத்துகின்றன ஐயா. தொடரட்டும் தங்களின் பணி.
    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆய்வில் நுழைந்த காலகட்டத்தில் பல பதிவுகளைப் பதியாததால் சில முக்கியமான செய்திகளை நான் இழந்துவிட்டேன். அதுவே கள அனுபவங்களைப் பதியத் தூண்டியது. நன்றி.

    ReplyDelete
  3. அருமை ஐயா... தங்களின் சிறப்பான சேவைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சேவை தொடரும். அன்பான வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. எப்பொழுதும் போல் தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அ.கலைமணி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துடன் பணி தொடரும். நன்றி.

      Delete
  6. வணக்கம் ஜம்புலிங்கம் ஐயா அவர்களே...
    தங்களின் பதிவுகளை எனது பத்திரிகை பணி காரணமாகத் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்றாலும், அவ்வப்போது படித்து வருகிறேன். (உண்மையைச் சொல்லித்தானே ஆகவேண்டும்!)
    தாங்கள் கண்காணிப்பாளராக இருப்பதிலிருந்தே தெரிகிறது தங்களின் கண்காணிப்புத்திறன் எவ்வாறு உள்ளது என்பது! நீங்கள் புத்தர் பிரானையே தொடர்ந்து கண்காணித்து வருவதன் விளைவாக இவ்வுலகுக்கு புத்தர் பற்றியும் பௌத்தம் பற்றியும் அரிய புதுப்புதுத் தகவல்களை வாரி வழங்குகிறீர்கள். தங்கள் பணி இந்த ஆண்டில் மேலும் சிறப்புற்று விளங்க வாழ்த்துகிறேன்.

    -இடைமருதூர் கி.மஞ்சுளா

    ReplyDelete
  7. எப்பொழுதுமபோல் தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் பணி தொடரும். வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. ஐம்பது ஐநூறாக வாழ்த்துக்கள்

    ReplyDelete

  9. 50 பதிவுகள்...500 பதிவுகளாய் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்துவரும் தங்களின் வாழ்த்தோடு பதிவுகளைத் தொடருவேன். நன்றி.

      Delete
  10. ஆராய்ச்சிகளும், பயணங்களும் எளிதல்ல. மிகவும் சிரமப்பட்டும் எந்த தகவலும் கிடைக்காமல் போகலாம். எதிர்பாராத செய்திகள் புதையல் போல கிடைக்கலாம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. எந்நிலையிலும் தங்களைப் போன்றோரின் வாழ்த்துடன் பயணம் தொடரும். நன்றி.

    ReplyDelete
  12. புகைப்படம் இணைத்திருந்தால் பதிவுக்கு வலுவூட்டுவதாக அமைந்திருக்கும்...சிறப்பான தேடல், ஆய்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. பதிவுக்குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டதால் உள்ளது உள்ளபடியே தரப்பட்டுள்ளது. ஆதலால் புகைப்படம் சேர்க்க இயலா நிலை. தங்களின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. அரிய தகவல்கள் .சிறந்த பதிவு .வாழ்த்துக்கள் சார் .

    ReplyDelete
  15. dr.k.ravindran05 January, 2014

    Revisit research is very hard in nature.It is very interesting to note your energyboost in achieving new heights in this. congrats.dr.k.ravindran.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து மறுபடி களப்பணி என்பது சிரமமே. இருப்பினும் ஒவ்வொரு களப்பணியும் பாடமாக அமைகிறது. நன்றி.

      Delete
  16. தங்களின் வாழ்த்துக்களுடன் பயணம் தெர்டரும். நன்றி.

    ReplyDelete
  17. உங்களின் களப்பனி பற்றிய கட்டுரை மிக அருமை.மிக்க நன்றி.

    ReplyDelete
  18. தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  19. Well. I appreciate your sincere everlosting effort. Your valuable works are allways lead you in a very prosperous feature. Wish you all success.ksrinivasan

    ReplyDelete
  20. உங்களைப் போன்றோரின் எழுத்து என்னை மென்மேலும் எழுதவைக்கிறது.தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  21. புத்தாண்டில் வாழ்வில் மென்மேலும் வளரவும், தங்கள் பணி தொடர்ந்து பல பதிவுகளை மேற்கொள்ளவும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    து.நடராஜன்
    கடலூர்.

    ReplyDelete
  22. தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் இவ்வாண்டிலும் பணி தொடரும். நன்றி.

    ReplyDelete
  23. தங்கள் அரும்பணி போற்றுகின்றேன். பாராட்டுகள்

    ReplyDelete
  24. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete

Post a Comment