1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது கீழ்க்கண்ட
புத்தர்சிலைகள் தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்டன.
1.மங்கலம் (1999)
2.அய்யம்பேட்டை (நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி) (1999)
3.புதூர் (2000)
4.கோபிநாதப்பெருமாள் கோயில் (2002) தலையின்றி
5.கோபிநாதப்பெருமாள் கோயில் (2002) தலையின்றி
6.குடவாசல் (2002)
7.சுந்தரபாண்டியன்பட்டினம் (2002)
8.திருநாட்டியத்தான்குடி (2003)
9.உள்ளிக்கோட்டை (2005)
10.குழுமூர் (2006)
11.ராஜேந்திரப்பட்டினம் (2007)
12.வளையமாபுரம் (2007)
13.திருச்சி (2008)
14. கண்டிரமாணிக்கம் (2012)
15.கிராந்தி (2013)
16.மணலூர் (2015)
17.பிள்ளைபாளையம் (2019)
சுந்தரபாண்டியன்பட்டினம் புத்தர் வரையிலான நாளிதழ் செய்திகளை இதுவரைபார்த்துள்ளோம். இப்பதிவில் திருநாட்டியத்தான்குடி புத்தர் சிலையைப் பற்றிக் காண்போம்.
23 ஏப்ரல் 1995இல் கும்பகோணம் என்.சேதுராமன் அவர்களுடன் ஆய்வு பற்றி பேசிக்கொண்டிருந்தபோது தஞ்சாவூரில் பௌத்தம் தொடர்பாக அவர் கூறுகின்ற செய்திகளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது நாகப் பட்டினத்தில் புத்தர் விகாரை, நாகப்பட்டினம் வெளிப்பாளையம்,
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், சோழபுரம், திருநாட்டியத்தான்குடி,
திருமலைராயன்பட்டனம், அம்மன்குடி, நாகேஸ்வரர் கோயில் அருகே பகவர், மன்னார்குடி, பட்டீஸ்வரம், புத்தமங்கலம், திருச்சோபுரம், போதிமங்கை
போன்ற இடங்களைப் பற்றியும் கூறியிருந்தார்.
மார்ச் 2003இல் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், திரு வி.கண்ணன், திரு கணேசன் ஆகியோருடன் களப்பணி சென்றபோது திருநாட்டியத்தான் குடியில் புத்தர் சிலையைக் காண முடிந்தது. மூங்கில் தோப்பில் ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது.பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த சிலையின் வலது கை உடைந்த நிலையிலும், கழுத்தும், முகமும் சற்றுச் சிதைந்த நிலையிலும் இருந்தன. உள்ளங்கையில் தர்ம சக்கரத்தைக் காணமுடிந்தது. இப்பகுதியில் மழை வராமலிருக்கும்போது, மழை பெய்வதற்காக இச்சிலைக்கு எருக்க மாலை அணிவித்து துள்ளு மாவு கலந்து, தப்படித்து, கற்பூரம் ஏற்றினால் மழை வந்துவிடும் என்றும், மழை வந்தபின் சிலையை மறுபடியும் சாய்த்து வைத்துவிடுவதாக உள்ளூரில் தெரிவித்தனர். இச்சிலையைப் பற்றியும், அதே நாளில் அங்கு கண்ட, அவ்வூரில் பிறந்து வளர்ந்த,63 நாயன்மார்களில் ஒருவரான கோட்புலி நாயனார் சிலையைப் பற்றியும குடவாயில் பாலசுப்பிரமணியன் தந்த செய்தி நாளிதழ்களில் வெளியானது.
திருவாரூர் மாவட்டம் திருநாட்டியத்தான்குடியில் மூங்கில் காட்டில் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது. வலது கை முற்றிலும் உடைந்த நிலையில், கழுத்து சிதைந்த நிலையில் இருந்த இச்சிலையின் வானோக்கி உள்ள வலது கையில் தர்ம சக்கரக்குறி காணப்படுகிறது. தீச்சுடர் உடைந்த நிலையில் இருந்தது.
அக்டோபர் 2013இல் முனைவர் வீ.ஜெயபால் குழுவினரோடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது திருநாட்டியத்தான்குடி சென்றபோது புத்தரை தலையின்றி காண முடிந்தது. சில நாள்களுக்கு முன்பு வரையிருந்த தலையைக் காணவில்லை என்றும், அருகில் இதைப்போன்றே இன்னொரு சிலை உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். அந்தச் சிலையைப் பார்க்க ஆவலிருந்தபோதிலும் நேரமின்மையால் செல்லமுடியவில்லை. அச்சிலை புத்தர் சிலையாக இருக்க வாய்ப்புள்ளது என்ற நிலையில் அதனைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.
நன்றி : செய்தி வெளியான இதழ்கள்
தங்களது பணி சிறக்கட்டும்
ReplyDeleteஅருமை ஐயா...
ReplyDeleteதங்களின் அயரா பணி போற்றுதலுக்கு உரியது ஐயா
ReplyDeleteதங்களின் தேடல் தொடரட்டும்