வெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம் : சும்மா வலைத்தளம்

வலைப்பதிவர் திருமதி தேனம்மை லெஷ்மணன் அவரது தளத்தின் சாட்டர்டே போஸ்ட் பதிவிற்காக என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தார். என் பௌத்த ஆய்வினை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரையை அவரது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். அவர் என்னை அறிமுகப்படுத்திய விதம் என்னை நெகிழவைத்துவிட்டது. என் கட்டுரை வெளியான அவரது தளத்தின் பக்கத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். 

எனது மதிப்புக்கும் பிரமிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் பௌத்தம் பற்றி எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள். இவரைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார், முனைவர், பௌத்தம், சமணம், பிறதுறைகள், விக்கிபீடியா, சிறுகதைகள் போன்றவற்றில் 800 க்கும் மேற்பட்ட அரிய பதிவுகளை எழுதியவர். பௌத்தம் பற்றிய தொல்பொருள் ஆய்வுக் கட்டுரைகளை நான் இவரது தளத்தில் விரும்பி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் கீழடி பற்றிய இவரது தொல்பொருள் ஆய்வுக் கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. 

இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம். பூமிக்கடியிலும் தேடல்கள் நிகழ்த்தி சாதித்திருக்கும் இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இவரைப் பற்றி முழுமையாக இங்கே வாசியுங்கள் :) ! . 

இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக ஏதேனும் எழுதித்தரும்படிக் கேட்டபோது இன்றைய சூழலில் அதி முக்கியத் தேவையான இலக்கு நோக்கிய பயணம் என்ற கட்டுரையை அனுப்பி இருந்தார்கள். ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய கட்டுரை இது. 


டிஸ்கி:- எவ்வளவு அரிய தகவல்கள். எவ்வளவு உழைப்பு அதோடு கூடவே தன்னடக்கம். பிரமிப்பாய் இருக்கிறது சார். இலக்கு நோக்கிய பயணத்தில் உங்கள் விடாமுயற்சி வெற்றி ஈட்டித் தந்தது. உங்களை முன்மாதிரியாகக் கொள்கிறேன். புத்தர் சிலை, சமண தீர்த்தங்கரர் சிலைகளை உங்கள் பதிவில் பார்த்தபோதே மிரண்டிருக்கிறேன். குமாஸ்தா பணியிலிருந்து கொண்டே முனைவர் பட்டம் பெற்றது மாபெரும் சிறப்பு. சாட்டர்டே ஜாலி கார்னரை சிலாக்கியமான ஒன்றாக ஆக்கியமைக்கும் அன்பும் நன்றியும். :) தொடரட்டும் உங்கள் தேடல்கள். வாழ்க வளமுடன்.


ஒரு சாதனையைச் செய்வதற்கு ஓர் இலக்கினை நோக்கிய உறுதியான பயணமும் மன உறுதியும் தேவை என்பதை எனது ஆய்வின் அனுபவம் உணர்த்தியது. 1993வாக்கில் பௌத்தம் தொடர்பான ஆய்வில் தடம் பதிக்கும்போது நான் எதிர்கொண்ட நேர்மறைக் கருத்துகளைவிட எதிர்மறைக் கருத்துகள் அதிகமானவை. எதிர்மறைக் கருத்துகளை நேர்மறையாக்கிக் கொண்டு களம் இறங்கியதால் தமிழ்நாட்டில் கால் நூற்றாண்டு காலத்தில் 29 புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர்களும் ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் அப்போது சொன்னவற்றைச் சிந்திக்கும்போது இக்களத்தில் எவ்வாறு நான் துணிவோடு இறங்கினேன் என்பது எனக்கு வியப்பாக உள்ளது.  



·         தம்பிநீ பாக்குற அலுவலக வேலையை முழுசாப் பாரு. அதுபோதும்.
·         உன்னாலெல்லாம் முடியாது. ஆய்வுங்கிறது கடல்.
·         ஆய்வுப் பணிய கல்வியாளர்கள்தான் பாக்க முடியும். அனாவசியமா இதுல தலையிடாதே. உன்னால முடியாது.
·         வேலையும் பாத்துக்கிட்டுஆய்வும் செய்யறதா அது எப்படி?
·         ஏம்ப்பா படிச்சுட்டு இன்னம நீ ஆசிரியரா ஆவப்போறியா. இப்படியே இருந்து  வேலையைப் பார்த்துக்கிட்டு ஏதாவது பதவி உயர்வு கிடைக்குதான்னா பார்.
·         கிளார்க் வேலை பாக்குற உனக்கு அதெல்லாம் முடியாது.
·         எப்பயும் ஆய்வுச் சிந்தனையோட இருந்தாத்தான் ஆய்வுல ஈடுபடலாம்.
·         அங்கங்க சில நூல்களைப் படி. குறிப்பெடு. காலவாரியாகத் தொகுத்துவிடு.
·         தடயமே இல்லாத ஒரு பொருள் குறித்து ஆய்வு செய்வது வீண்.
·         தலைப்பு அப்படியே இருக்கட்டும்சிரமமின்றி செய்திகளைத் தொகுத்து   உள்ளடக்கத்திற்குத் தந்துவிடு.
·         ஏதாவது 200-300 பக்கங்களுக்குத் தொகுத்து ஆங்காங்கே தலைப்புகள்உள் தலைப்புகள் கொடுத்து முடித்துவிடு.
·         அப்பப்ப சில கட்டுரைகளை எழுது. ஒண்ணா தொகுத்துடு. ஆய்வேடு தயார்.
·         உன்னால முடியாது. ரொம்ப ஆசைப்பட்டா ஒண்ணு செய். காளியம்மன்கோயில்,மாரியம்மன் கோயில் வரலாறுன்னு எடுத்து ஏதாவது  எழுதிக்கொடுத்து முடிச்சுடு.
·         நாலு புத்தகத்தைப் பாரு. அங்கங்க கொஞ்சத்தை எடு. முடிச்சுடு.
·         இல்லாததைத் தேடி அதில் புதியவற்றைக் கண்டுபிடி. வரலாற்றுக்கு உதவும்.
·         முன்னவர்கள் போட்ட பாதையில் செல். புதியதாக எதையாவது   வெளிக்கொணர முடிகிறதா என்று பார்.
·         எளிதில் எவரும் தொடாத துறை. கண்டிப்பாகச் சாதிக்கலாம்.
·         நேரம் காலம் பார்க்காம அலையணும். அப்பத்தான் முடியும்.
·         பௌத்த சமயச் சுவடு எதுவுமே இல்லை. ஆய்வை ஆரம்பித்தாலும் முடிக்க முடியாது.
·         நீ வாத்தியார் இல்லப்பா. உன்னால முடியாதுப்பா.
·         நம்மளோட வேலை பார்க்குற டைப்பிஸ்ட். இவரு ஆய்வு பண்ணப்போறாராம்.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக ஒரு ஆசிரிய நண்பர் சொன்னது மனதில் ஆழப்பதிந்தது. அவர், "நீ ஒரு கிளார்க். உன்னால எல்லாம் ஆய்வு செய்ய முடியாது", என்று கூறினார். இது நடந்தது 1993இல். 

அனைவர் சொன்ன கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டேன். அனைத்தையும் தீர அலசிப் பார்த்தேன். அவரவர்களின் போக்கில்அவரவர் தகுதிக்கும் இயலாமைக்கும் தகுந்தபடியாக அவர்கள் கூறியதை உணர்ந்தேன். நம்மால் ஏன் முடியாது என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். எந்த ஒரு வெற்றிக்கும் தொடர் முயற்சியும்ஈடுபாடும்அயரா உழைப்பும் தேவை.  தமிழக வரலாற்றில் பல வருடங்களுக்குப் பின்னர் பேசப்படும் அளவில் ஒரு துறையில் நம்மால் முயன்ற வரை சாதிக்கமுடியும் என்ற நிலையில் களம் இறங்கினேன். 

அலுவலகப்பணி பாதிக்கப்படாத வகையில் விடுமுறை நாள்களில் எனது படிப்பும்ஆய்வும் தொடர்ந்ததுதொடர்கிறது. விடுமுறை நாள்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு எங்கெங்கு செல்லவேண்டும்எந்தந்த நூல்களைப் படிக்கவேண்டும் என்ற குறிப்பினை வைத்துக்கொண்டு நடைமுறைப்படுத்த ஆரம்பித்தேன். என் முயற்சிக்கு ஓரளவு பயன் கிடைத்ததை உணர ஆரம்பித்தேன்.

முக்கியமான அலுவலக வேலை இருக்கும் நாள்களில் ஆய்வு தொடர்பான செய்திகள் வரும்போது அதனை உறுதி செய்ய விடுப்பு எடுக்க இயலா நிலை அமையும். அவ்வாறான நிலைகளில் அதிகம் சிரமப்பட்டுள்ளேன். ஒரு குறிப்பிட்ட துறைக்கு நம்மால் ஆன பங்களிப்பு என்ற நிலையில் தொடர்ந்து வருகின்ற விடுமுறை நாள்களில் அதற்கான தீர்வினைக் காண ஆரம்பித்தேன்.

குடும்பம் என்ற நிலையில், மனைவி மற்றும் படித்துக்கொண்டிருககும் இரு மகன்கள். பொருளாதார நிலையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுவருவதற்கான செலவினைப் பார்த்தபோது மலைப்பாக இருந்தது. ஆய்வினைத் தொடர்முடியுமோ என்ற ஐயம் பல முறை ஏற்பட்டது. இருந்தாலும் மேற்கொண்ட முயற்சிக்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதன் பயனாக எதிர்கொண்ட சிரமங்களும் அதிகமாயின.

நான் இருக்கும் இடத்தையும்அருகிலுள்ள இடங்களையும் களமாகக் கொண்டு சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வு தொடர்பான தேடலைத் தொடர்ந்ததன் விளைவு அரிய கண்டுபிடிப்புகளைக் காண உதவியது. 

பௌத்தம் தொடர்பான துறையில் முதன்மை ஆதாரங்களாகக் கொள்ளும் அளவு இக்கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன என்பதை நினைக்கும்போது நான்  பெருமை அடைகிறேன். 1993இல் சற்று நான் யோசித்து பின்வாங்கியிருந்தால் என் முயற்சியில் தோற்றிருப்பேன். எதிர்மறைக் கருத்துகளையும் நேர்மறைக் கருத்துக்களாகக் கொண்டு நாம் எடுக்கும் முயற்சிகள் உரிய பலனைத் தரும் என்பதைத் தற்போது உணர்கிறேன். 

"நீ ஒரு கிளார்க். உன்னால எல்லாம் ஆய்வு செய்ய முடியாது", என்று கூறிய ஆசிரிய நண்பர் சில நாள்களுக்கு முன்பு என்னை நேரில் பார்த்து தான் அப்போது சொன்னதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டாம் என்று இருக்கையில் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார். "உங்களைப் போன்றோரின் கருத்துகளே என்னை ஓர் ஆய்வாளனாக ஆக்கிவிட்டன" என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்தேன். அவரும் வலிந்த, வெற்றுப் புன்னகையோடு விடை பெற்றார். இவரைப் போல பலரை அடையாளம் காண உதவியது எனது ஆய்வுக்களம். 

பௌத்தம் மற்றும் சமணம் (65 கட்டுரைகள்), பிற துறைகள் (65), சிறுகதைகள் (40), தமிழ் விக்கிபீடியா (300+), ஆஙகில விக்கிபீடியா (100+), நாளிதழ்களில் கட்டுரைகள் (20), சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ  (85), முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூ (135), கண்டுபிடிப்பு பற்றிய செய்திகள் (150+), எண்ணிடலங்கா வாசகர் கடிதங்கள்  என்ற நிலையில் 800க்கும் மேற்பட்ட பதிவுகளையும் ஆறு நூல்களையும் எழுதவும், 16 புத்தர் சிலைகளையும் 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டுபிடிக்கவும் உதவியது அப்போது எடுத்த தீர்க்கமான முடிவே. தமிழுலகிற்கு என்னால் ஆன எழுத்துபபணியும் ஆய்வுப்பணியும் தொடரும். 

நான் ரசிக்கும் இயக்குநர் பாலசந்தரின் திரைப்படம் ஒன்றைப் பற்றி ஆங்கில தி இந்து நாளிதழில் வந்த விமர்சனத்தில் "அவருடன் போட்டி போட ஒருவரும் இல்லை. ஆகையால் அவர் தனக்குத் தானே போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்" என்று படித்தது இன்னும் என் நினைவில் உள்ளது. இதனை அப்படியே எனக்குப் பொருத்திப் பார்த்து மனம் நிறைவு கொள்கிறேன். எனது பயணம் தொடரும், என் எழுத்துக்கும் ஆய்விற்கும் துணை நிற்கும் அனைவருடைய வாழ்த்துக்களுடனும். 
----------------------------
ஆய்வு தொடர்பான சந்திப்புகள்
வலைப்பதிவர் திரு துரைராஜ் எங்கள் இல்லம் வந்திருந்தார். ஆய்வு தொடங்கி ஆன்மீகம் வரை பல துறைகளில் நல்ல உரையாடல்.
திரு துரை செல்வராஜ் உடன் ஜம்புலிங்கம்
(எங்கள் இல்லம், 15 நவம்பர் 2016)

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிற்பத்துறை சார்பாக நடைபெற்ற பன்முகப்பார்வையில் சமணக்கலை என்ற தலைப்பிலான பயிலரங்கில் (15-23 நவம்பர் 2016) கலந்துகொள்ள வந்த அறிஞர் பெருமக்கள் என்னைக் காண வந்திருந்தனர். ஆய்வுகள் தொடர்பாக சிறிய விவாதம். இவர்கள் என்னைக் காண வந்ததைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். 2006இல் குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிக்க உதவிய திரு ம.செல்வபாண்டியன், பெரம்பலூர் மாவட்டத்தில் சமணம் என்ற தலைப்பில் உரையாற்றியதை என்னுடன் பகிர்ந்து கொண்டார். 
முனைவர் லதா, திரு அப்பண்டைராஜன், திரு கனக அஜிததாஸ், திரு சுகுமாரன்  உடன் ஜம்புலிங்கம் (தமிழ்ப்பல்கலைக்கழகம், 21 நவம்பர் 2016)


திரு ம.செல்வபாண்டியன் உடன் ஜம்புலிங்கம்
(தமிழ்ப்பல்கலைக்கழகம், 21 நவம்பர் 2016)
தமிழ் இன்று இதழுக்காக எழுதிய பதிவின் மேம்பட்ட வடிவம். 

Comments

  1. சகோதரியின் தளத்தில் தங்களின் பதிவினைப்படித்து மகிழ்ந்தேன் ஐயா

    ReplyDelete
  2. மகத்தான சாதனையாளர் ஆகிய தாங்கள் என்னையும் பதிவில் இணைத்துக் கொண்ட்மைக்கு மனமார்ந்த நன்றி..

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு. சமீபத்தில் வெளி வந்த பலரின் பதிவுகள் படிக்க முடியவில்லை. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. ஊக்கம் தரும் பதிவு . தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. >>> அவரவர்களின் போக்கில், அவரவர் தகுதிக்கும் இயலாமைக்கும் தகுந்தபடியாக அவர்கள் கூறியதை உணர்ந்தேன்..<<<

    இந்த உணர்வுதான் தங்களை வெற்றிப்படிகளில் ஏற்றியது..

    சாதனைகள் தொடரட்டும்..

    ReplyDelete
  6. முயல்வோருக்கு
    ஊக்கம் தரும் அருமையான பதிவு
    அயர்ச்சியும் தளர்ச்சியுமற்று
    முயன்ற முயற்சி பிரமிப்பூட்டுகிறது
    தங்களைத் தொடர்வதில்
    பெருமிதம் கொள்கிறேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  7. "இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம்." என்ற சகோதரியின் கருத்தை வரவேற்கிறேன்.
    உண்மை தானே!
    தங்கள் பணி தொடர வேண்டும்.
    தங்கள் சாதனைகளும் தொடர வேண்டும்.
    வாழ்த்துகள்!
    தொடருங்கள்; தொடருவோம்!

    ReplyDelete
  8. வணங்குகிறேன் ஐயா.

    ReplyDelete
  9. மிக்க நன்றியும் அன்பும் சார். வாழ்க வளமுடன். தொடரட்டும் உங்கள் அரிய பணிகள். !

    ReplyDelete
  10. for a self made man.... a humble salute.

    ReplyDelete
  11. உங்களுடைய தளராத முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  12. திருமதி தேனம்மையி ந் தளத்தில் வாசித்திருக்கிறேன் வெற்றி மீது வெற்றி வந்து உம்மைத்தேடும் வாழ்த்துகள்

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரரே

    தங்களின் அரிய சாதனைகளை படிக்கும் போது மகிழ்வடைந்தேன். என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தங்களின் தன்னம்பிக்கை தந்த வெற்றிகள், முயற்சிக்கு என்றும் தோல்வியில்லை என்பதை சுட்டிக் காண்பிக்கிறது. தாங்கள் என் தளம் வந்து என் பதிவுகளை படித்து கருத்துரைகள் வழங்குவது என்னை மிகவும் பெருமையடையச் செய்கிறது. தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. வாழ்த்துகளும் பாராட்டுகளும். உங்கள் முயற்சியும் உழைப்பும் பிரமிக்கத் தக்கது. அதனாலேயே உங்களை எங்களின் பாஸிட்டிவ் பதிவுகளில் ஒருமுறை சொல்லியிருந்தேன்.

    ReplyDelete
  15. ஐயா முதலில் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

    தங்களின் பணி மிக அரிய போற்றுதற்குரிய பணி, சேவை, குறிப்பாக எதிர்மறைக் கருத்துகள் நிலவிய சூழலில் தங்கள் வெற்றிக்கான பாதையை வகுத்துக் கொண்டு கருமமே கண்ணாயினார் என்று உழைத்து வெற்றியின் சிகரத்தைத் தொட்டு அதையும் தாண்டி தாங்கள் பணியினைத் தொடர்ந்து கொண்டிருப்பது எங்களைப் போன்ற பலருக்கும் முன்னோடியாக, நல்ல ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றீர்கள் என்று இங்கு நாங்கள் சொல்வது மிகையான வார்த்தைகள் அல்ல.

    மேலும் தங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துகள் ஐயா! பாராட்டுகளும்.

    கீதா: மேற் சொன்ன கருத்துடன், நான் என் மகனுக்கு அடிக்கடிச் சொல்லும் வார்த்தைகள் ஐயா. உங்கள் அனுபவம் போலத்தான் என் மகனுக்கும் பல தடைகள் எழுந்தன. என்றாலும் அவனுக்கு ஓர் இலக்கை ஏற்படுத்தி இதோ இப்போதும் அதில் பல இடர்பாடுகளுடன், தடைகளுடன்,ஆனால் அடைந்தே தீருவேன் என்ற குறிக்கோளுடன் உழைக்கும் அவனுக்கு உங்களின் இந்தக் கட்டுரையை அனுப்பியுள்ளேன் ஐயா. அவனுக்கு ஊக்கம் அளிக்கும் என்ற வகையில்! மிக்க நன்றி ஐயா தங்களின் பகிர்விற்கு. மிகவும் ஆழ்ந்து வாசித்தோம்.

    மிக்க நன்றி மீண்டும் எங்கள் பணிவான வணக்ங்கள்!

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா. உங்களை வியந்து முன்மாதிரியாகப் பார்ப்போரில் நானும் ஒருத்தி. உங்கள் தேடல்களும் கண்டுபிடிப்புகளும் வரலாற்றில் மிக முக்கியமானவை. அரிய தகவல்களைப் பகிர்வதற்கு நன்றி. உங்கள் பணிக்குத் தேவையானவற்றை, குறிப்பாக உடல்உள்ள சுகத்தை இறைவன் அருளப் பிரார்த்திக்கிறேன்.

    தேனக்காவுக்கு நன்றிகள்.

    ReplyDelete

Post a Comment