பௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து

தஞ்சாவூர் அருகே திருக்கோயில்பத்து என்னும் கிராமத்தில் ஒரு புத்தர் சிலையை வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மார்ச் 2015இல் கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள திருக்கோயில்பத்து (அருந்தவபுரம்) என்னுமிடத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்போது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில்லாமல் உள்ள அந்த புத்தர் சிலையை உள்ளூரில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். 
திருக்கோயில்பத்து புத்தர் சிலை
புகைப்பட உதவி : முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்
1993 முதல் மேற்கொண்டு வரும் களப்பணியில் இதுவரை 29 சிலைகள் (15 புத்தர் சிலைகள், 14 சமண தீர்த்தங்கரர் சிலைகள்) என்னால் தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடும் காணமுடிந்தது. 15 புத்தர் சிலைகளில் ஒன்று நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியாகும்.

14 புத்தர் சிலைகளில் இரு சிலைகள் மட்டுமே நின்ற நிலையிலுள்ளவை. மற்ற அனைத்தும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளவை. இவற்றுள் தலையில்லாமல் உள்ள சிலைகள் கோபிநாதப்பெருமாள்கோயில் (இரு சிலைகள்), வளையமாபுரம், அய்யம்பேட்டை அருகே மணலூர் ஆகிய இடங்களில் காணப்பட்டன. களப்பணியின்போது தலைப்பகுதி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளும் உண்டு.

இதுவரை தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் போலவே இச்சிலையும் உள்ளது. மேலாடை, இடுப்பில் ஆடை, காலில் ஆடை, தியான நிலையில் கைகள், அகன்ற மார்பு ஆகிய அனைத்து கூறுகளும் இச்சிலையில் காணப்படுகின்றன.    

சுமார் கால் நூற்றாண்டு காலமாக மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது இவ்வாறாக பல இடங்களில் கேட்பாரின்றி உள்ள சிலைகளைக் காணமுடிந்தது. சமயக்காழ்ப்புணர்வு, வரலாற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் குறைந்து வரும் நிலை, தொல்பொருள்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்ற மனப்பாங்கு காணப்படாமை போன்ற நிலைகளே இவ்வாறாக சிலைகள் காணப்படுவதற்குக் காரணங்களாகின்றன. இச்சிலையைத்தேடி திருக்கோயில்பத்து செல்லும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். 

நன்றி : தஞ்சாவூர் அருகே அரிய புத்தர் சிலை, தினமணி, 6 மார்ச் 2015

Comments

  1. தலையில்லாத புத்தர் சிலையைப் படத்தில் பார்க்கும் போதே, அந்நாளைய மதவெறியின் உச்சத்தை, வரலாற்றின் பக்கத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  2. காரைக்குடியிலிருந்து திருச்சி வரும் போது வழியில் தீர்த்தங்கரர் சிலைகள் என்று எழுதி இருந்தது பார்த்தபோது உங்கள் நினைவு தான் வந்தது. எத்தனை எத்தனை விஷயங்களை நாம் இழந்திருக்கிறோம்......

    ReplyDelete
  3. அயராத தேடல்...பெளத்தம் பரவிச்செழித்த மண் என்பதை உங்கள் உழைப்பால் மீண்டும் மீண்டும் உணர்ந்து சிலிர்க்கிறேன்

    ReplyDelete
  4. அயராத தேடல்...பெளத்தம் பரவிச்செழித்த மண் என்பதை உங்கள் உழைப்பால் மீண்டும் மீண்டும் உணர்ந்து சிலிர்க்கிறேன்

    ReplyDelete
  5. பௌத்தம் மீண்டும் மலர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தலை இல்லாத அந்தச் சிலை புத்தருடையதுதான் என்பதை நிலைநாட்டும் வகையில் ஏதாவது நிரூபணம் உள்ளதா?மேலும் அது கற்சிலையா சுதையா என்பது போன்ற செய்திகள் ஏதாவது உள்ளதா. ?உங்கள் அயராப்பணி தொடரட்டும்

    ReplyDelete
  7. வணக்கம் முனைவரே அரிய விடயங்கள் தங்களின் தேடுதல் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  8. திருக்கோயில் பத்து செல்லும் நாள் விரைவில் அமையட்டும்
    நன்றிஐயா

    ReplyDelete
  9. அரிய பதிவு!
    த ம 5

    ReplyDelete
  10. அந்நாளில் எவ்வளவு மத வெறியோடு இருந்து இருக்கிறார்கள். அழிந்தவை எத்தனை எத்தனையோ...தங்களைப் போன்றோர்களால் தான் நாங்கள் இந்தளவாவது தெரிந்து கொள்கிறோம். நன்றி. தம 6

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு ஐயா, தங்கள் களப்பணி தொடரட்டும்..

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு, தங்கள் களப்பணி தொடரட்டும்.

    ReplyDelete

Post a Comment