பௌத்த சுவட்டைத் தேடி : பெரண்டாக்கோட்டை


டிசம்பர் 1999
மங்கலம் என்னுமிடத்தில் மீசையுடன் கூடிய புத்தர் சிலையைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்த தொல்லியல் அறிஞர் திரு ஸ்ரீதரன் எனது பௌத்த ஆய்வுக்காக அரும் உதவிகளைச் செய்துவரும் அறிஞர்களில் ஒருவர்.  அவர் அனுப்பியிருந்த The Mail இதழில் 1978இல் (நாள் விவரம் கிடைக்கப்பெறவில்லை) வெளியான ஒரு செய்தி நறுக்கு  ஒரு புத்தர் சிலையின் தலையைக் கண்டுபிடிக்க உதவியது. அச்சிலை தஞ்சாவூர் மன்னார்குடி சாலையில் தஞ்சாவூரிலிருந்து 12 கிமீ தொலைவிலுள்ள பெரண்டாக்கோட்டை என்னுமிடத்தில் இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திரு ஸ்ரீதரன் அவர்கள் அனுப்பிய 1978இல் வெளியான தி மெயில் இதழின் செய்தி நறுக்கு
 அவர் அனுப்பிய செய்தியில் தமிழக அரசு தொல்லியல் துறையால் கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புத்தரின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தில் புத்தரின் தலைப்பகுதி காணப்பட்டது. அவர் அனுப்பிய செய்திக்குறிப்பினை வைத்துக் கொண்டு  பெரண்டாக்கோட்டை இருக்குமிடம் பற்றி விசாரித்தேன். தஞ்சாவூரிலிருந்து வடுவூர் செல்லும் பேருந்தில் வாண்டையார் இருப்புக்கு முதல் நிறுத்தமான (காட்டூர், படிக்கோலம் நிறுத்தங்களுக்கு அடுத்த நிறுத்தம்) பெரண்டாக்கோட்டை என்னுமிடத்தில் இறங்கினேன். இறங்கி விசாரித்தபோது பலர் அப்பகுதியில் புத்தர் இல்லை என்று கூறினர். தொடர்ந்து வயல் பகுதியில் நடந்து சென்றேன். ஆங்காங்கே விசாரித்தேன். புத்தர் என்று கேட்டாலே வித்தியாசமாகப் பார்த்தனர். தொடர்ந்து விடாமல் சென்று கொண்டிருந்தேன். 1978இல் வெளியான செய்தியின் அடிப்படையில் பார்க்கச் செல்கின்றோமே, சுமார் 20ஆண்டுகளுக்குப் பின் அந்த தலைப்பகுதி இன்னும் இருக்குமோ என்ற ஐயம் மனதில் இருந்தது.

பின்னர் சந்தித்தவர்களிடம் எனது கேள்வியை மாற்றி "இங்க அய்யனார் சாமி, கருப்பன் சாமி ஏதாவது கும்பிடுகிறார்களா?" என்று கேட்க ஆரம்பித்தேன். இக்கேள்விக்குப் பலன்  கிடைத்தது. ஒருவர் "சாம்பானைப் பத்திக் கேக்குறியா?"  என்றார். எனக்கு ஓரளவு தெம்பு வந்தது. புத்தருக்கு அருகில் வந்துவிட்டோம் என்பதை உணர்ந்தேன். "கொஞ்ச தூரம் போனீன்னா அங்க ஒரு தோப்பு இருக்கும். அங்க சாம்பான் இருப்பார், போய்ப் பார்" என்றார். அவர் தனி நபரைப் பற்றிக் கூறுகிறாரா அல்லது சிலையைப் பற்றிக் கூறுகிறாரா என்பதை உறுதி செய்வதற்காக அடுத்த கேள்வியைக் கேட்கத் தயாரானபோது அவர், "அங்க போய் விசாரிச்சுக்க" என்றார். சிறிது தூரம் சென்ற பின் அடர்ந்த மரங்களைக் கொண்ட தோப்பினைக் கண்டேன். அங்கே யாரும் இல்லை. தலைப்பகுதி என்று கூறப்பட்டிருந்ததால் அதிகம் கூர்ந்து கவனமாகக் தேட வேண்டியிருந்தது. எந்தத் தடயமும் இல்லை. தனியாக ஒரு தோப்பில் நடமாடப் பயமாக இருந்தது. எப்படியும் புத்தரைப் பார்த்துவிட்டுத்தான் திரும்பவேண்டும் என்ற எண்ணம் மனதில் அதிகமானது. ஒரு சுற்று வந்தபின் சற்று ஓய்வெடுக்க எண்ணி அமர்ந்தேன். அப்போது அங்கு வந்த ஒருவர், "நீதான் சாம்பானைப் பாக்க வந்தீயா?" என்றார். "சாம்பான் இல்லே, புத்தரைப் பார்க்க வந்தேன்" என்று கூறவந்த நான், அவ்வாறு கூறாமல் "ஆமாம். சாம்பானைப் பார்க்க வந்தேன்" என்றேன். நான் முன்னர் சுற்றிப் பார்த்த இடத்திலிருந்து சற்று அருகே பிறிதொரு இடத்திற்கு அவர் என்னை அழைத்துச் சென்றார்.   அங்கு அவர் அழைத்துச் சென்றது ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதியாக இருந்தது. தலையில் தீச்சுடர் உடைந்த நிலையில் காணப்பட்டது. நெற்றியில் திலகக்குறி உள்ளது. இந்த புத்தரைச் சாம்பான் என்று கூறி வழிபட்டு வருவதைக் களப்பணியின்போது காணமுடிந்தது. இந்த புத்தர் சிலையின் தலைப்பகுதி உள்ள இடத்தினை சாம்பான் கோயில் என்று கூறுகின்றனர்.

பெரண்டாக்கோட்டை புத்தர் (1999), புகைப்படம் பா.ஜம்புலிங்கம்
 அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், உள்ளிக்கோட்டை, ஒகுளூர், கரூர், கிள்ளியூர், பட்டீஸ்வரம், பரவாய், புட்பவனம், புத்தமங்கலம், புதூர், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மன்னார்குடி, மானம்பாடி,  விக்கிரமங்கலம், விக்ரமம், வெள்ளனூர் உள்ளிட்ட பல இடங்களில் புத்தருக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அய்யம்பேட்டையில் முனீஸ்வரன் என்றும், பெருஞ்சேரியில் ரிஷி என்றும் புத்தரை வழிபடுகின்றனர்.

மே 2004
காலச்சுவடு இதழுக்காக திரு து.ரவிக்குமார் அவர்களும் Outlook இதழுக்காக திரு ஆனந்த் அவர்களும் பௌத்த ஆய்வு தொடர்பாக என்னைக் காண வந்தபோது சோழ நாட்டில் உள்ள புத்தர் சிலைகளில் சிலவற்றைக் காண்பிப்பதற்காக அவர்களை அழைத்துச் சென்றேன். அப்போது அந்த புத்தர் வழிபாட்டில் இருப்பதைக் காணமுடிந்தது.

மே 2010
யாதும் என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்துள்ள திரு கோம்பை அன்வர் அவர்கள் வேர்களைத் தேடி என்ற தலைப்பில் பௌத்தம் தொடர்பாக எடுத்த குறும்படம் தொடர்பாக என்னைக் காண வந்தார். அப்போது அவரது குழுவினருடன் பெரண்டாக்கோட்டை உட்பட பல இடங்களுக்குச் சென்றோம். அப்போதும் அந்த புத்தருக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருவதை அறிந்தோம்.

ஏப்ரல் 2014
சரசுவதி மகால் தமிழ்ப்பண்டிதர் நண்பர் திரு மணி.மாறன் அவர்கள் பனையக்கோட்டைக்கு களப்பணி செல்வதாகக் கூறி என்னை அழைத்தார். அவருடன் பனையக்கோட்டை களப்பணியினை முடித்துவிட்டு திரும்பும் வழியில் (6.4.2014, ஞாயிறு) பெரண்டாக்கோட்டை சென்றேன். பல முறை பெரண்டாக்கோட்டை சென்றிருந்தபோதிலும் புத்தர் இருந்த இடத்தை உடனடியாக அறியமுடியவில்லை. அங்கு விசாரித்தபோது ஒரு பெரியவர் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ள ஒரு பனை மரத்தைக் காண்பித்து அங்கேயுள்ள தோப்பில் இருப்பதாகக் கூறினார். அவர் கூறியதும் எனக்கு முன்னர் பார்த்த இடம் நினைவிற்கு வந்துவிட்டது. நாங்கள் இருவரும் தோப்பை நோக்கி வயலில் வரப்பில் நடந்து சென்றோம். அவர் அடையாளம் சொன்ன இடத்தில் உள்ள தோப்பை அடைந்தோம்.   முன்னர் இருந்த அதே இடத்தில் பெரண்டாக்கோட்டை புத்தரை இருவரும் பார்த்தோம். அந்த புத்தருக்கு வழிபாடு நடத்தப்படுவதாகவும், உடற்பகுதி அருகில் இருந்ததாக முன்னர் பேசிக்கொண்டதாகவும் உள்ளூரில் கூறினர். உதவி செய்த உள்ளூர் மக்களுக்கு நன்றி கூறிவிட்டு மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம்.



 

 

பெரண்டாக்கோட்டை புத்தர் (2014), புகைப்படம் பா.ஜம்புலிங்கம்
பெரண்டாக்கோட்டை புத்தருடன் ஜம்புலிங்கம், புகைப்படம் திரு மணி மாறன்
 இவ்வாறாக புத்தரின் தலைப்பகுதி அய்யம்பேட்டை அருகே வையச்சேரி என்னுமிடத்தில் இருந்ததாக திரு அய்யம்பேட்டை செல்வராஜ் கூறியிருந்தார். பிற களப்பணிகளின் பட்டீஸ்வரம் அருகே முழையூர்,  குடவாசல் அருகே சீதக்கமங்கலம் ஆகிய இடங்களில் புத்தரின் த்லைப்பகுதி இருந்ததைப் பார்த்துள்ளேன். அய்யம்பேட்டை, முழையூர் மற்றும் சீதக்கமங்கலம் ஆகிய இடங்களில் புத்தருக்கு வழிபாடு நடத்தப்பெறவில்லை. பெரண்டாக்கோட்டையில் மட்டுமே வழிபாடு நடத்தப்படுகிறது.

நன்றி
செய்தி நறுக்கை அளித்து உதவிய திரு கி ஸ்ரீதரன்
களப்பணியில் உதவிய காட்டூர் திரு இராசேந்திரன்
உடன் வந்து புகைப்படங்கள் எடுத்து உதவிய திரு மணி.மாறன்
திரு பன்னீர்செல்வம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் அறவுரை 

ஒருவன் சிறிதளவே அறநூல்களைக் கற்றிருந்தாலும் அவ்வாறு கற்றதனை வாழ்க்கையில்   கடைப்பிடித்து ஒழுகி, ஆசை, கோபம், மோகம் ஆகியவற்றை நீக்கி உண்மையை உணர்ந்து உலக அழுக்குகளினின்றும் விடுபட்டுத் தூய்மைப்பட்ட மனத்தினனாய் எவ்விதப் பற்றுமின்றிஇருப்பின் அவன் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தன் தூய நெறிக்குரிய பயனை அனுபவிக்கின்றான்.-தம்ம பதம்  19

சூழல்

சாவத்தியில் இருவர் புத்தரிடம் சென்று துறவு மேற்கொண்டனர். அவருள் ஒருவன் அறநூற்கல்வியில் காலம் கழித்தான். அறநூல் கற்றோன் பெரும் கல்வியாளன் ஆனான். தவநெறியில் சென்றோன் ஞானம் பெற்று நிர்வாண நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். நூல் கற்றோன் தனது அறிவுத் திறனை நிலைநாட்ட விருப்பம் கொண்டு தவநெறியினனைக் கேள்வியால் மடக்க முயன்றான். இவனது எண்ணத்தை அறிந்த புத்தர் இருவரையும் அழைத்து உயர்அறமாகிய தவநெறி குறித்துச் சில கேள்விகள் கேட்டார். நூல் கற்றோன் அவற்றிற்கு விடை சொல்ல மாட்டாமல் விழித்தான். தவ நெறியினன் தன் சொந்த அனுபவத்தின் மூலம் சரியான விடை சொன்னான். அவனை வாழ்த்திய புத்தர் இவ்விரு செய்யுள்களையும் கூறியருளினார். 

(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)  

-----------------------------------------------------------------------------------------------------------------------

In search of imprints of Buddha: Perandakottai, Thanjavur district

On the basis of a newspaper clipping of The Mail - containing information that there was a statue of Buddha's head in Perandakottai in Thanjavur district - from Mr K.Sridharan, Archaeologist, I went to that place and found the Buddha's head which to my surprise was under worship in the name of Samban till date.

12.4.2014இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 12.4.2014 

Comments

  1. தங்களின் தளராத மனம் தான் தேடுவதை கிடைக்க வைக்கிறது... களப்பணி தொடரட்டும் ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆய்வில் நுழையும்போது இவ்வாறாகத் தேடுதல் வேட்டை தொடரும் என நினைக்கவில்லை. ஆய்வின் போக்கு என்னை இவ்வாறு அழைத்துச்செல்கிறது. தவிரவும் தங்களைப் போன்றோரின் எழுத்துக்கள் என்னை மென்மேலும் எழுதவும், தேடவும் செய்கின்றன. நன்றி.

      Delete
  2. Replies
    1. வலைப்பூ ஆரம்பித்த காலம் முதல் தொடர்ந்து என் ஆய்வை நேசிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  3. தங்கள் ஆய்வுப்பணிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  4. Great work indeed..,:-D

    ReplyDelete
  5. மிகவும் அருமையான செய்தி....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  6. I have visited with my diploma student (forgot his name--now he is a lawywer in Tanjore) the image was coverd with earth. only the curly hair visible then we exposed the head of Buddha.As usual our names are not included in the press report.

    ReplyDelete
    Replies
    1. சுருள்முடியை வைத்து புத்தரின் தலைப்பகுதியை வெளிக்கொணர்ந்த தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. கண்டுபிடிப்பில் தங்களது பெயர் இடம்பெறாதது வேதனைக்குரியதே. ஆய்வின் தொடக்க காலம் முதல் தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல் எனக்கு உதவியாக உள்ளது. நன்றி.

      Delete
  7. ஒரு சிலையின் தலைப் பகுதி மட்டுமே கிடைத்ததும் அதை வழிபட்டு வரும் மக்கள் அது புத்தரின் தலைச் சிலை என்று நம்பமாட்டார்கள், அவர்களுக்கு அது ஒரு கிராமத்துதேவதை. பெரண்டாக் கோட்டை புத்தர் சிலையில் ( நீங்கள் புகைப்படம் எடுத்தது )மீசை தெரிகிறதா. ?உங்கள் களப் பணி முடிந்து பட்டம் பெற்றாய் விட்டதல்லவா.? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பெரண்டாக்கோட்டை புத்தருக்கு மீசை இல்லை. திருச்சி மாவட்டம் மங்கலம் என்னுமிடத்தில் திரு ஸ்ரீதரன் அவர்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட சிலையில் மீசை உள்ளது. 2000இல் நான் டாக்டர் (முனைவர்) பட்டம் பெற்றுவிட்டேன். ஆர்வம் காரணமாக தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டு வருகிறேன். தங்களின் அன்பிற்கு நன்றி.

      Delete
  8. புத்தர் சாம்பானாக மாறிய செய்தி வியப்பளிக்கிறது ஐயா.
    மக்கள் மதங்களைப் பார்ப்பதில்லை என்பதும் புரிகிறது.
    தங்களின் களப்பணி தொடரட்டும் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வேதாரண்யம் பகுதியில் களப்பணி சென்றபோது அய்யனார் சிலையை சாம்பான் என்று கூறுவதாகக் கேள்விப்பட்டேன். எது எப்படியிருப்பினும் சிலையைப் பாதுகாக்கவேண்டுமென்ற மக்களின் எண்ணம் போற்றற்குரியது. நன்றி.

      Delete
  9. அருமை.
    நன்றி.

    ReplyDelete
  10. புத்தர் சாம்பான் என அழைக்கப்படும் தகவல் இப்பதிவின் மூலம் அறிந்தேன். பத்திரிக்கை நறுக்கு தகவலை வைத்துக்
    கொண்டு புத்தரை சிலையை தேடி கண்டறிந்து இருக்கிறீர்கள். சிலையின் மீத முள்ள பகுதிகள் நிலத்தினுள் புதைந்து இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை அப்பகுதியில் விசாரித்தும், தேடியும் பார்த்தேன். கிடைக்கவில்லை. நிலத்தில் புதைந்திருக்க வாய்ப்புள்ளது.

      Delete
  11. I am happy the same sculpture of Buddha is still under worship as it was in 1978 when we visited this place. best wishes for your field study. k.sridaran

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் ஆரம்பித்துவைத்த ஓர் நல்ல செய்தியை இவ்வகையில் தொடர்ந்து நான் எடுத்துச் செல்வது எனக்குப் பெருமையாக உள்ளது. தங்களின் வாழ்த்துடன் என் பயணத்தைத் தொடர்வேன். நன்றி.

      Delete
  12. sir,
    inspiration is nothing but inner direction which leads you from one step to another towards achieving your goal.your interest on the subject and your tireless field work will certainly take you far beyond your doctorate.wish you success.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறுவதுபோல் உள்ளிருந்து இயக்கப்படும் உணர்வு அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது. உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்ள உதவியாக உள்ளது. நன்றி.

      Delete
  13. Our greetings and best wishes for your continuous research work on Buddha in Tamilnadu.

    ReplyDelete
  14. Dear sir,
    I am viewing all your articles. This would give good guidance to the scholars of present and future generation. Your articles give a real picture of the trouble you have faced during research. Best wishes for your continuous research.
    Yours,
    Dr.P.Perumal

    ReplyDelete
    Replies
    1. நான் ஆய்வில் அடியெடுத்து வைத்த காலம் முதற்கொண்டு என் ஆய்வின் மீது தாங்கள் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. இலண்டன் அருங்காட்சியகத்திலிருந்து நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களைப் பெற கருத்துக்களைக் கூறி தாங்கள் உதவியது இன்றும் என் நினைவில் உள்ளது. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  15. தங்களைப் போன்றவர்களின் அசராத
    அசுர முயற்சியே காலம் மறைத்து நிற்பவற்றை
    வெளிக்கொணர்ந்து உலகறிய வைக்கிறது
    தங்கள் சீரிய முயற்சிகளுக்கும்
    அற்புதமான பகிர்வுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றிற்கு நம்மால் ஆன பங்களிப்பு என்ற நிலையில் இவ்வாறான முயற்சிகள் பெரிதும் துணை நிற்கின்றன என்பதே உண்மை. உங்களைப் போன்ற நண்பர்களின் வாழ்த்துக்கள் மென்மேலும் பணியைச் செப்பமாகச் செய்ய உதவுகின்றன. நன்றி.

      Delete
  16. அன்பு நண்பர் ஜம்பு

    கட்டுரை அருமை..நல்லதொரு களப்பணி..நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்.

    அன்புடன்
    ரமேஷ்பாபு

    ReplyDelete
  17. தங்களைப் போன்ற நண்பர்கள் பதிவுகளைத் தொடர்ந்து வரும்பொழுது மென்மேலும் பயணிக்கவும், எழுதவும் ஆவல் எழுகிறது. நன்றி.

    ReplyDelete
  18. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : அ.பாண்டியன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : அரும்புகள் மலரட்டும்

    வலைச்சர தள இணைப்பு : சூரியனுக்கு டார்ச் அடிச்சு பார்த்திடலாமா!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைகும் தகவலுக்கும் நன்றி.

      Delete
  19. சீரிய முயற்சிகளுடன் சிறப்பான பணிகளுக்குப் பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.!

    ReplyDelete
  20. வணக்கம்
    ஐயா

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர அறிமுகத்தைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

      Delete
  21. மதிப்புக்குரிய அய்யா அவர்களே, உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    ReplyDelete

Post a Comment