பௌத்த சுவட்டைத் தேடி : புதுச்சேரி


முனைவர் பா.ஜம்புலிங்கம்

ஆகஸ்டு 24, 2013
எனது முனைவர் பட்ட ஆய்விற்காக சோழ நாட்டைச் சார்ந்த புத்தர் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க பிப்ரவரி 1999இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். அந்நிறுவனத்தார் மேற்கொள்ளும் சமணத்திட்டம் தொடர்பாக முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினர் டிசம்பர் 2011இல் என்னைத் தொடர்பு கொண்டனர்.  அத்திட்டத்திற்கு உதவ இசைந்தேன். எனது மேற்பார்வையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம் என்ற திட்டத்தை மேற்கொண்ட திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் களப்பணியின்போது சேர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தினரோடு சோழ நாட்டில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றிய செய்தியையும் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிறுவனத்தார் பௌத்தம் தொடர்பான கருத்தரங்கிற்காக (24.8.2013) என்னை அழைத்திருந்தனர். இத்திட்டம் தொடர்பாக அவர்கள் தயாரித்துள்ள குறுந்தகட்டின் பதிவுகளைப் பார்க்கவும், கருத்து கூறவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  1999இல் என் ஆய்வுக்காகத் தரவுகளைத் தேடிச் சென்ற நிறுவனம் என்னை இக்கருத்தரங்கிற்காக அழைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.  பௌத்த ஆய்வு என்ற களத்தில் வந்துள்ள முந்தைய அறிஞர்களின் ஆய்வுகளை நோக்கும்போது இக்காலகட்டத்தில் அதிகமான புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதை அறியமுடியும். சுமார் 70 ஆண்டுகளுக்கான இத்தேடலைப் பகிர இக்கருத்தரங்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.



                            
                     செவ்வியல் தமிழ் இலக்கிய நோக்கில் தமிழகத்தில் பௌத்தம் கருத்தரங்கு, புதுச்சேரி                            புகைப்படங்கள் ரமேஷ்குமார்
1940
மயிலை சீனி வேங்கடசாமி தனது பௌத்தமும் தமிழும் என்ற நூலில் சோழ நாட்டில் 10 இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


1956
1956 முதல் பிற புகைப்படங்களுடன், புத்தரின் புகைப்படங்களை புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் தொகுத்துவருகிறது. களப்பணி 1999இல் களப்பணி சென்றபோது 16 இடங்களைப் பற்றிய தகவல்களை அறியமுடிந்தது. மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்டுள்ள சிலைகளில் 4 சிலைகள் இப்பட்டியலில் உள்ளன.


1960
பி.ஆர்.சீனிவாசன், Story of Buddhism with special reference to South India என்ற நூலில் வெளியான Buddhist images of South India என்ற கட்டுரையில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாக 8 இடங்களைக் குறிப்பிடுகிறார். மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்டுள்ள சிலைகளில் 3 சிலைகளைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

1979
சி.மீனாட்சி, South Indian Studies-II என்ற நூலில் வெளியான Buddhism in South India என்ற தலைப்பிலான கட்டுரையில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாக 11 இடங்களைக் குறிப்பிடுகிறார். மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்டுள்ள சிலைகளில் 9 சிலைகளை அவர் விவாதிக்கிறார்.

1979
டி.என்.வாசுதேவராவ், Buddhism in Tamil Country என்ற நூலில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாக 12 இடங்களைக் குறிப்பிடுகிறார். மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுவனவற்றில் 8 சிலைகளைப் பற்றி அவர் கூறுகிறார்.

1997
Institute of Asian Studies வெளியிட்டுள்ள Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu என்ற நூலில் 38 இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளதாக கே.சிவராமலிங்கம் குறிப்பிடுகிறார். மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுவனவற்றில் 10 சிலைகளைப் பற்றி இவர் ஆராய்கிறார். 

1998
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் இரண்டாம் பகுதி (கி.பி.900-1300) என்ற நூலில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாக 19 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுவனவற்றில் 6 சிலைகள் இவற்றில் அடங்கும்.
1993-2013
கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற களப்பணியின்போது மேற்கண்ட அறிஞர்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும், பிற இடங்களிலும் ஒட்டுமொத்தமாக 65 புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது.  இவற்றுள் கீழ்க்கண்ட இடங்களில் புத்தர் சிலைகள் தனியாகவும், பிற அறிஞர்கள் துணையோடும் கண்டுபிடிக்கப்பட்டு தமிழ்கூர் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன.


1.மங்கலம் (1999)
2.அய்யம்பேட்டை (செப்புத்திருமேனி) (1999)
3.புதூர் (2000)
4.கோபிநாதப்பெருமாள்கோயில் (2002)  (தலையின்றி)
5.கோபிநாதப்பெருமாள்கோயில் (2002) (இடுப்புப்பகுதி மட்டும்)
6.குடவாசல் (2002)
7.சுந்தரபாண்டியன்பட்டனம், இராமநாதபுரம் மாவட்டம் (2002)
8.திருநாட்டியத்தான்குடி (2003)
9.உள்ளிக்கோட்டை (2005)
10.குழுமூர் (2006)
11. ராசேந்திரப்பட்டினம் (2007)
12.வளையமாபுரம் (2007)
13.திருச்சி(2008)
14. கண்டிரமாணிக்கம் (2012)
15. கிராந்தி (2013) 

-----------------------------------------------------------------------------------------------------------------------

புத்தர் அறவுரை

ொருளற்றவற்றைப் பொருளுடையதாகவும் பொருளுடையதைப் பொருளற்றதாகவும் பார்க்கிறவர் உண்மை நிலையை ஒருபோதும் அடைவதில்லை. தவறான நெறியையே அடைவர்.-தம்ம பதம்  11
ொருளுடையதைப் பொருளுடையதாகவும் பொருளற்றதைப் பொருளற்றதாகவும் அறிபவர்கள் உண்மை நிலையினை உணர்கின்றனர். அவர்கள் நன்னெறியினை அடைந்தவராவர். -தம்ம பதம் 12
 சூழல்

சாரிபுத்தரும் மொக்கலானரும் புத்தரின் பெருமையை உணர்ந்து, தங்களது ஆசிரியரான சஞ்சயனை விட்டு நீங்கிப் புத்தரை அடைக்கலமாகச் சென்றடைந்தனர். அவர்கள் தங்கள் பழைய ஆசிரியரான சஞ்சயனிடம்  புத்தரின் பெருமைகளைக் கூறி அவரையும் புத்தரை அணுகத் தூண்டினர். ஆனால் சஞ்சயன் தமது பெருமைகளைப் பேசி மறுத்துவிட்டார். இதைச் சாரிபுத்தரும் மொக்கலானரும் புத்தரிடம் கூற, புத்தர் கூறிய செய்யுள்கள் இவை.  

(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)  

In search of imprints of Buddha: Pondicherry
During 1999 I had been to Pondicherry French Institute to collect materials regarding my study. The institute invited me for a workshop on 24th August 2013, which I felt as a great privilege. English version of the article will appear on 15th September.

-----------------------------------------------------------------------------------------------------------------------
கீழ்க்கண்ட முகநூலில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் தொடர்பான செய்திகளைக் காணலாம் : http://www.facebook.com/buddhismincholacountry.

Comments

  1. செவ்வியல் தமிழ் இலக்கிய நோக்கில் தமிழகத்தில் பௌத்தம் கருத்தரங்கு,செய்திகளும் படங்களும் அருமை ஐயா. தங்களின் பணி தொடர வாழ்த்துகின்றேன் ஐயா.

    ReplyDelete
  2. தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete

Post a Comment