பௌத்த சுவட்டைத் தேடி : புத்தமங்கலம்

ஜனவரி 1995
வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா அவர்களுடன் ஆய்வு தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தபோது பௌத்தம் தொடர்பான பெயர்கள் உள்ள ஊர்களைப் பார்க்கும்படிக் கூறியிருந்தார். என்னுடைய ஆய்வின் ஒரு பகுதியாக இவ்வாறான ஊர்களைத் தேடலும் அமைந்தது.

சனவரி 1999
டிசம்பர் 1999க்குள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டை பல்கலைக்கழகத்தில் அளிப்பதற்கு வசதியாக அதிகமாக களப்பணி  மேற்கொண்டிருந்தேன். நாளிதழ்களிலும், பிற நூல்களிலும் வரும் செய்திகளைத் தொகுத்து வந்தேன். இந்நிலையில் தினமலர் இதழில் துண்டித்த தலையுடன் கூடிய புத்தர் சிலை என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது.  "நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் அகரகடம்பனூர் ஊராட்சிக்குட்பட்ட புத்தர்மங்கலம் கிராமத்தில் புத்தர் சிலை உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தலைப்பகுதி மட்டும் தனியே துண்டிக்கப்பட்ட சிலை அநாதையாகக் கிடந்தது. இந்த நிலையில் கிராம பிரமுகர்கள் சிலர் முயற்சித்து தாய்லாந்து நாட்டுப் புத்த மதத்தினரின் உதவியுடன் கிராம மக்கள் சிலை இருந்த இடத்தில் பீடம் ஒன்றை அமைத்து புத்தர் சிலையை அந்தப் பீடத்தில் வைத்தனர். ஆனால் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் அவர்களால் தனியாக பிரித்து எடுக்க முடியாத வகையில் இணைக்கமுடியாத வகையில் என்றும் அச்சிலை துண்டித்த தலையுடன்தான் இன்னமும் அந்த பீடத்தில் உள்ளது". களப்பணியின்போது அய்யம்பேட்டை, முழையூர் முதலிய இடங்களில் புத்தர் சிலையின் தலைப் பகுதி இருந்ததாகக் கேள்விப்பட்டேன். ஆனால் முதன்முதலாக தற்போதுதான் இவ்வாறாக தலைப்பகுதி இணைக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றி அறிந்தேன். அச்சிலையைக் காணும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்.

டிசம்பர் 1999
தஞ்சாவூரிலிருந்து திருவாரூருக்குப் பேருந்தில் பயணித்து, பின்னர் அங்கிருந்து கீழ்வேளூர் சென்றேன். பேருந்தைவிட்டு இறங்கி சிலை இருக்கும் இடத்தைப் பற்றி விசாரித்தேன். "வெளிநாட்டு புத்தபிட்சுகள் வருவார்களே அந்தக் கோயிலைக் கேட்கிறீர்களா" என்றார் ஒருவர். "மழையை வரவழைக்கும் சாமியைப் பார்க்க வந்தீங்களா" என்றார் மற்றொருவர். மிக அருகில் அவ்விடம் உள்ளது என்றும் நடந்து சென்றுவிடலாம் என்றும் கூறினர். சுமார் 2 கிமீ நடந்து செல்லவேண்டியிருந்தது. அங்கு அழகான கூரையுடன் கூடிய மண்டப அமைப்பில் இருந்த கோயிலைக் கண்டேன்.
புத்தர் கோயில் (1999)
புகைப்படம் :  முனைவர் பா.ஜம்புலிங்கம்




உள்ளே அமர்ந்த கோலத்தில் அழகான சிலையைப் பார்த்தேன். மழை வருவதற்காக சிலையின் தலையில் பட்டை மிளகாய் அரைத்து மேலே ஊற்றி, எருக்கம்பூ மாலை போட்டால் ஓரிரு மணி நேரத்தில் மழை வரும் என்றும், முன்னர் இவ்வாறு செய்துவந்ததாகவும், தற்போது மண்டபம் கட்டி விட்டதால் அவ்வாறு செய்யமுடியவில்லை என்றும் கூறினர். திருநாட்டியத்தான்குடி, விக்கிரமங்கலம், கிராந்தி ஆகிய இடங்களில் மழையைத் தொடர்புபடுத்திக் கூறுவதைக் களப்பணியின்போது நான் கேட்டுள்ளேன். கோடைக் காலத்தில் தாய்லாந்திலிருந்து புத்த மதத்தினர் அங்கு வந்து முடி எடுத்து விழா நடத்தி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவர் என்றும் தெரிவித்தனர்.இவ்வாறாக முடியெடுப்பதை புட்பவனம் செல்லும்போது கேள்விப்பட்டேன். புத்தருடன் வழிபாட்டில் நம்பிக்கையைத் தொடர்புபடுத்துவதைக் களப்பணியின்போது பல இடங்களில் காணமுடிந்தது. 

புத்தமங்கலம் புத்தர் (1999)
புகைப்படம் :  முனைவர் பா.ஜம்புலிங்கம்
ஜுலை 2004
தாய்லாந்து மாணவர்கள் புத்தமங்கலத்தில் உள்ள புத்தர் கோயிலின் மேற்கூரையில் செங்கல் ஓடுகளைப் பதிக்கவுள்ளதாக தினமணி இதழில் செய்தி வெளியானதைக் கண்டேன்.

புத்தர் கோயில் (2004)
புகைப்படம் உதவி: தினமணி
எனது ஆய்வின்போது  மேற்கொண்ட களப்பணியில் புத்தமங்கலம் என்ற பெயரில் மூன்று ஊர்களைக் காணமுடிந்தது. அவை முறையே கும்பகோணம் காரைக்கால் சாலையில் கிள்ளியூர் அருகிலும், கும்பகோணம் சீர்காழி சாலையிலும், கீழ்வேளுர் அருகேயும் உள்ளன. இவ்விடங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் அருகேயுள்ள  புத்தமங்கலத்தில் மட்டுமே புத்தர் சிலையைக் காணமுடிந்தது. பௌத்தம் அல்லது புத்தர் தொடர்பான பெயர்களைக் கொண்ட வேறு எந்த ஊரிலும் இவ்வாறாக புத்தர் சிலையைக் காணமுடியவில்லை. அவ்வகையில் புத்தமங்கலம் பெற்றுள்ள சிறப்பை என்னால் உணரமுடிந்தது.

துணை நின்றவை
இதழில் துண்டித்த தலையுடன் கூடிய புத்தர் சிலை, தினமலர், 1.1.1999
நாகை அருகே புத்தர் சிலைக்குக் கோயில் கட்டிய தாய்லாந்து மாணவர்கள், தினமணி, 14.7.2004
-----------------------------------------------------------------------------------------------------------------------

புத்தர் அறவுரை

மனமாசுடையவனும் புலன்களைக் கட்டுப்படுத்தாதவனும் மெய்யொழுக்கமற்றவனும் மஞ்சள் துறவாடையை அணிவதற்குத் தகுதியற்றவனாகிறான். அஃது அவனுக்கு உயர்வைத் தருவதில்லை.-தம்ம பதம்  9
மனமாற்றவரும் புலனடக்கமுள்ளவனும் மெய்யொழுக்க நெறியுடையவரும் எவரோ அவரே மஞ்சள் துறவாடை அணியத் தகுதியுடையவராவார். அவருக்கே அஃது உயர்வு தரும். -தம்ம பதம் 10
 சூழல்

அன்பர்கள் சிலர் மூத்த துறவியாகிய தேவதத்தனுக்கு அழகிய உயர்ந்தஆடையை அளித்தனர். அவ்வாடை தேவதத்தனுக்கு நல்ல தோற்றத்தைத் தரவில்லை. இதுகுறித்து புத்தரிடம் கேட்டபோது, தேவதத்தன் முற்பிறப்பிலும் தன் இயல்பிற்குப் பொருந்தாத ஆடையணிந்து அதனால் துன்புற்றதைச் சுட்டிக் காட்டி இவ்விரு செய்யுளையும் கூறியருளினார். 

(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)  

In search of imprints of Buddha: Buddhamangalam, Tamil Nadu
Based on the paper news that there was a Buddha in Buddhamangalam I went there and saw the Buddha. Apart from this place I saw two other in the same name. But there were no Buddha. English version of the article will appear on 15th August.

-----------------------------------------------------------------------------------------------------------------------
கீழ்க்கண்ட முகநூலில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் தொடர்பான செய்திகளைக் காணலாம் : http://www.facebook.com/buddhismincholacountry. 
   

Comments

  1. மழை வருவதற்காக சிலையின் தலையில் பட்டை மிளகாய் அரைத்து மேலே ஊற்றி, எருக்கம்பூ மாலை போட்டால் ஓரிரு மணி நேரத்தில் மழை வரும்
    மக்களின் நம்பிக்கைகள்தான் எத்தனை விதம்.தங்களின் பணி தொடரட்டும்.நன்றி

    ReplyDelete
  2. பணிசிறக்க வாழ்த்துக்கள் அய்யா,
    சரவணா இரா

    ReplyDelete

Post a Comment