களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012)-திருவாரூர் மாவட்டம்



புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றபோது கிடைத்த அனுபவம் பற்றி ஒவ்வொரு மாதமும் முதல் நாள் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் ஒவ்வரு மாவட்டத்திலும் புதிதாக என்னால் தனியாகவும், பிற அறிஞர்கள் துணையுடனும் 1993இல் பௌத்த ஆய்வு தொடங்கிய நாள் முதல் 2012 வரை கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பார்க்க அழைத்துச்செல்ல விரும்புகிறேன். 20 ஆண்டுகளில் அதிகமாகப் புத்தர் சிலைகள் பார்த்த இடமான  திருவாரூர் மாவட்டத்திற்கு முதலில் அழைக்கிறேன்.வாருங்கள் பயணிப்போம். 



புதூர்  (2000)
புதூர் புத்தர்
 புகைப்படம் ஜம்புலிங்கம்
திருவாரூர் வட்டத்தில் திருநெல்லிக்காவல் புகைவண்டி நிலையம் அருகே உள்ள புதூர் என்னும் சிற்றூரில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் ஒரு புத்தர் சிலை களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. திரு சிங்காரவேலன் துணையுடன் சுமார் 25 கிமீ மிதிவண்டியில் பல இடங்களில் சுற்றித் திரிந்தபின் இறுதியில் இச்சிலையைக் காணமுடிந்தது. திருமணமாகாத பெண்கள் இச்சிலையைச் சுற்றி வந்தால் திருமணம் நடைபெறும் என நம்புகிறார்கள். சிலையின் நெற்றியிலும், மார்பிலும் திருநீறு பூசியுள்ளனர். புத்தர் சிலைகளில் பொதுவாகக் காணப்படும் மேலாடை, தலையில் தீச்சுடர் முடி, அமைதி தவழும் முகம், புன்னகையின் வெளிப்பாடு போன்ற கூறுகள் உள்ளன. தீச்சுடர் முடியும் மூக்கும் சற்று உடைந்த நிலையில் உள்ளன.  ஒவ்வொரு வைகாசி பௌர்ணமியின்போதும் சிறப்புப் பூஜை உள்ளூர் மக்களால் நடத்தப்பெறுகிறது. புதூரில் குளம் வெட்டும்போது இச்சிலை கிடைத்ததால் குளம் இருக்கும் இடத்தை புத்தன்குட்டை என்றழைக்கின்றனர்.  2008இல் மறுபடியும் களப்பணி சென்றபோது அச்சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருவதைக் காணமுடிந்தது.  

குடவாசல் (ஏப்ரல் 2002)
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சீதக்கமங்கலம் என்னுமிடத்தில் அழகான புத்தரின் தலைப்பகுதி இருப்பதாக திரு கோவிந்தராஜன் தந்த செய்தியின் அடிப்படையில் அச்சிலையைக் காணமுடிந்தது. நெற்றியில் திலகக்குறி, நீண்டு வளர்ந்த காதுகள், உடைந்த நிலையில் தலையில் தீச்சுடர், புன்னகை தவழும் உதடுகள், அமைதியான கண்கள் ஆகியவற்றோடு இச்சிலை இருந்தது.


.திருநாட்டியத்தான்குடி (2003)
முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், திரு வி.கண்ணன் ஆகியோர் துணையுடன் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது திருவாரூர் மாவட்டம் திருநாட்டியத்தான்குடியில் மூங்கில் தோப்பில் ஒரு புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அமர்ந்த் நிலையில் தியான கோலத்தில் உள்ள இச்சிலையின் வலது கையும், கழுத்தும், முகமும் சற்றுச் சிதைந்த நிலையில் உள்ளன. உள்ளங்கையில் தர்மசக்கரம் காணப்படுகிறது. இப்பகுதியில் மழை வராமலிருக்கும்போது, மழை பெய்வதற்காக இச்சிலைக்கு எருக்க மாலை அணிவித்து கற்பூரம் ஏற்றினால் மழை வந்துவிடும் என உள்ளூரில் நம்புகிறார்கள்.  















உள்ளிக்கோட்டை  (2004)
தவத்திரு மாதவகுமாரசுவாமிகள் கூறிய செய்தியின் அடிப்படையில்அவருடைய துணையுடன் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை என்னுமிடத்தில் ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது. உள்ளிக்கோட்டையில் வயற்பகுதியில் ஆடுமாடுகள் திரிந்துகொண்டிருந்த இடத்தில் முன்னர் அச் சிலை இருந்ததாகவும், அவ்விடத்தை செட்டியார் மேடு என்றழைத்ததாகவும் களப்பணியின்போது கூறினர். செட்டியார் குதிரையில் வந்ததாகவும், திருடர்கள் அவரை வழி மறிக்கவே அவர் கல்லாக மாறிவிட்டார் என்றும், சிலர் இராஜகுமாரன் குதிரையில் வந்ததாகவும் பின்னர் கல்லாக மாறிவிட்டதாகவும் கூறினர்.  தீச்சுடர் வடிவிலான தலைமுடியும், மூக்கின் பகுதியும், காலின் ஒரு பகுதியும், கைகளும் உடைந்த நிலையில் இருந்தன. செப்டம்பர் 2012இல் அவ்விடத்தில் புத்தர் சிலை இல்லை. அருகில் விசாரித்தபோது புத்தர் மாயமாக மறைந்துவிட்டதாகக் கூறினர் தங்கள் ஊரின் பெயரையும் பெருமையையும் வெளிவுலகிற்கு வெளிப்படுத்திய புத்தர் தங்களை விட்டுப் பிரிந்தது மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டதாக உள்ளூரில் கூறினர்.


வளையமாபுரம் (2007)
 வளையமாபுரம் புத்தர்
 புகைப்படம் ஜம்புலிங்கம்
1993இறுதியில் வலங்கைமான் பகுதியில் புத்தர் சிலை இருப்பதாகச் செய்தி கிடைத்தது. இருப்பினும் அதிகமான களப்பணிகளுக்குப் பின்னர் 2007இல் மேற்கொண்ட களப்பணியின்போது அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் ஒரு சிலை வளையமாபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிலை சோழ நாட்டில் காணப்படுகின்ற பிற புத்தர் சிலைகளுக்குரிய கூறுகளான அகன்ற மார்பு, பரந்த தோள்கள், வலது கையில் தர்மசக்கரக்குறி, மார்பிலும் இடுப்பிலும் ஆடை போன்ற கூறுகளைக் கொண்டுள்ளது. இச்சிலை வயலில் காணப்பட்டது. அருகில் தலைப்பகுதி அண்மைக்காலம் வரை இருந்ததாகக் களப்பணியின்போது கூறினர். அதனைத்தேட முயற்சி மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. பெரம்பலூர் அருகே ராயம்புரம், திருச்சி அருகே கீழக்குறிச்சி ஆகிய இடங்களிலும் தலையில்லாத புத்தர் சிலைகளைக் களப்பணியின்போது காணமுடிந்தது.

கண்டிரமாணிக்கம் (2012)
கண்டிரமாணிக்கம் புத்தருடன் ஜம்புலிங்கம்
கண்டிரமாணிக்கம் என்னுமிடத்தில் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட குழுவினருடன் மேற்கொண்ட களப்பணியின்போது அமர்ந்த நிலையில் தியான கோலத்திலான அந்தப் புத்தர் சிலையைக் காணமுடிந்தது. மேட்டுத்தெருவில் ஒரு வீட்டுக் கட்டமானப்பணியின்போது சுமார் ஆறு அடி ஆழத்தில் இச்சிலை இருந்ததாகக் கூறினர். புத்தர் சிலையை வீட்டின் முன்பாக வைத்து உள்ளூர் மக்கள் வழிபட்டதைக் காணமுடிந்தது. எலுமிச்சம்பழ மாலை மற்றும் மலர்மாலை அணிவித்து நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டிருந்தனர்.  சிலையின் முன் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. அருகில் விபூதி, குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. உள்ளூர் மக்கள் புத்தரை வணங்கிச்சென்றதைக் காணமுடிந்தது. சோழ நாட்டில் காணப்படுகின்ற பிற புத்தர் சிலைகளைப் போலவே இதுவும் கி.பி.10-11ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.  இச்சிலை புன்னகை தவழும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, நீண்டு வளர்ந்த காதுகள், பரந்த மார்பில் காணப்படும் மேலாடை, இடுப்பில் ஆடை ஆகிய கூறுகளுடன் உள்ளது.  வானோக்கி உள்ள வலது கையில் தர்ம சக்கரக்குறி காணப்படுகிறது. தலையில் சுருள்முடிக்கு மேல் தீச்சுடர் உள்ளது. மூக்கு சிதைந்த நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாகப் புதையுண்டு அண்மையில் தோண்டியெடுக்கப்பட்ட இந்த அழகான புத்தர் சிலை சில நாள்களுக்குள் கண்டிரமாணிக்கத்திலிருந்து திருவாரூர் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதைக் களப்பணியின்போது அறியமுடிந்தது.   

ோழ நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான புத்தர் சிலைகள் இந்த 20 ஆண்டுகளில் மேற்கொண்ட களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிற மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றி வழக்கம்போல் ொடர்ந்து வரும் மாதங்களில் முதல் தேதியன்று விவாதிப்போம். அடுதத மாதம் தஞ்சாவூர் மாவட்டத்திற்குப் பயணிப்போம்.

நன்றி: களப்பணியில் உதவிய/துணைக்கு வந்த முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், திரு சிங்காரவேலன், திரு கோவிந்தராஜன், திரு கண்ணன் மற்றும் தவத்திரு மாதவகுமாரசுவாமிகள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றி.


முதல் அமர்வு (அமர்வின் தலைவர்)
நான்காம் அமர்வு (கட்டுரை வழங்கும் முன்)
நான்காம் அமர்வு (கட்டுரை வழங்கியபின்)
24.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) என்ற தலைப்பில் கட்டுரை வழங்கப்பட்டது. புகைப்படங்கள் உதவி உபாசகர் திரு E. அன்பன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் அறவுரை
இவ்வுலகில் பகைமையால் பகைமையை ஒழிக்கவியலாது. மாறாக அன்பால் அதனை அழிக்கலாம். இதுவே தொன்மையான அறமாகும்.  
-தம்ம பதம்  5

சூழல்
மலட்டுப் பெண்ணொருத்தி பொறாமையால் தன் மாற்றாளின் கருவைக் கலைக்க மருந்திடுகிறாள். அம்மருந்து தாய், சேய் இருவரது உயிரையும் குடிக்கிறது. இறக்கும் நேரத்தில் தன் மூத்தாளின் குழந்தைகளை அவ்வாறே கொல்வேன் என வஞ்சினம் கூறி இறந்தாள். மறுபிறவியில் கொல்லவும் செய்கிறாள். அதற்குப் பழியாக மூத்தாள் அடுத்த பிறவியில் அவள் குழந்தைகளைக் கொல்கிறாள். இருவரும் இவ்வாறு மாறி மாறி வஞ்சம் தீர்த்து வருகிறார்கள். இவர்களது இப்போராட்டத்தின் மூன்றாவது சுற்றில் இளையாள் இயக்கியாகப் பிறந்து மூத்தாளின் குழந்தைகளைத் தின்ன வரும்பொழுது அவர்கள் அனைவரும் புத்தரிடம் வந்து சேர்கின்றனர். புத்தர் தமது அறிவுரையால் இயக்கியின் கோபத்தைத் தணித்து இப்பாடலைக் கூறி நெறிப்படுத்துகிறார்.    
(தம்ம பதம், தமிழாக்கம்: நா.செயப்பிரகாசு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002)  

Buddha statues found during field study (1993-2012) - Tiruvarur district
During the field study carried out in Tiruvarur district during the last two decades six Buddha statues were found by me individually and with the help of other scholars/friends. They were in Puthur, Kudavasal, Tirunattiyattankudi, Ullikottai, Valayamapuram and Kandramanickam.English version of the article will appear on 15th April.

Comments

  1. கழுத்தற்றும் அங்கங்கள் சிதைந்தும் புத்தர் சிலைகள் இருப்பது, மதச் சண்டைகளின் விளைவாகவே என்று எண்ணுகிறேன். எனினும், இருப்பவற்றை இருக்கின்ற நிலையியேனும் அந்தந்த ஊரினர் பாதுகாக்கவேண்டியது அவசியம்.

    ReplyDelete
  2. மக்கள் தெய்வங்களை மதங்களைக் கடந்து போற்றுகின்றார்கள், வணங்குகின்றார்கள் என்பதனையே புத்தருக்கு திருநீறு பூசி வணங்கும் வழக்கம் காட்டுகின்றது என்று எண்ணுகின்றேன்.
    கருத்தரங்கப் படங்கள் அருமை. வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  3. களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012)-திருவாரூர் மாவட்டம் - Dr B Jambulinam அவர்களின் அருமையான கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி Dr B Jambulinam

    ReplyDelete

Post a Comment